சென்னை: தேர்தல் டிஜிபி அசுதோஷ் சுக்லா, சட்டம் ஒழுங்கு டிஜிபி டி.கே.ராஜேந்திரன் மற்றும் சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன் ஆகியோர் தங்கள் குடும்பத்துடன் நாடாளுமன்ற தேர்தலில் வாக்களித்தனர். தமிழகத்தில் 38 நாடாளுமன்ற தொகுதிகள் மற்றும் 18 சட்டமன்ற தொகுதிகளுக்கு நேற்று நடந்தது. இதையடுத்து தமிழகம் முழுவதும் அந்தந்த மாவட்ட கண்காணிப்பாளர்கள் தலைமையில் 1.5 லட்சம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
சென்னையை பொறுத்தவரை போலீஸ் கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன் தலைமையில் 15 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டனர். மேலும், போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் அமைக்கப்பட்டுள்ள தேர்தல் சிறப்பு கட்டுப்பாட்டு அறைக்கு வரும் புகார்களின் படி உடனுக்குடன் நடவடிக்கை எடுக்கும் வகையில் கூடுதல் கமிஷனர் தினகரன் தலைமையில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது. சென்னையில் நேற்று காலை 7 மணி முதல் மக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து தங்களது வாக்குகளை பதிவு செய்தனர்.
தேர்தல் டிஜிபி அசுதோஷ் சுக்லா தனது மனைவி மற்றும் மகனுடன் முகப்பேரில் உள்ள வேலம்மாள் பள்ளியில் தங்களது வாக்குகளை பதிவு செய்தனர். அதேபோல், தமிழக சட்டம் ஒழுங்கு டிஜிபி டி.கே.ராஜேந்திரன் நொளம்பூரில் உள்ள எஸ்பிஓஐஏ பள்ளியில் வரிசையில் நின்று வாக்களித்தார். சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன் மற்றும் அவரது மனைவியும் மாநில குற்ற ஆவண காப்பக இயக்குநருமான சீமா அகர்வால் ஆழ்வார்ப்பேட்டை அம்புஜம்மாள் தெருவிலுள்ள ஸ்ரீ நிவாச காந்தி நிலையத்தில் வாக்களித்தனர்.
பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி