மே. வங்கத்தில் பிரசாரம் செய்த மற்றொரு வங்கதேச நடிகரை உடனே வெளியேற்ற உத்தரவு
புதுடெல்லி: மேற்குவங்க மாநிலத்தில் தேர்தல் பிரசாரத்துக்கு வந்த, மற்றொரு வங்கதேச நடிகரையும் நாட்டை விட்டு உடனடியாக வெளியேற உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. வங்கதேசத்தை சேர்ந்த நடிகர் பெர்தோஸ் அகமது. இவர் பிஸினஸ் விசாவில் மேற்கு வங்கம் வந்தார். அங்கு ராய்கன்ச் தொகுதியில் திரிணாமுங் காங்கிரஸ் வேட்பாளரை ஆதரித்து அவர் தேர்தல் பிரசாரத்தில் கலந்து கொண்டார். இதனால் அவரது விசாவை ரத்து செய்து, இந்தியாவை விட்டு வெளியேற வேண்டும் என மத்திய அரசு கடந்த செவ்வாய்க்கிழமை உத்தரவு பிறப்பித்தது. இந்நிலையில், வங்கதேசத்தை சேர்ந்த மற்றொரு நடிகர் காஜி அப்துல் நூர் என்பவரும் மேற்கு வங்கம் வந்திருந்தார். இவர் டம்டம் தொகுதியில் திரிணாமுல் காங்கிரஸ் சார்பில் போட்டியிடும் சவுகதா ராய்க்கு ஆதரவாக பிரசாரம் செய்தார். இதன் வீடியோ காட்சியை தேர்தல் ஆணையத்திடம் வழங்கி பா.ஜ புகார் அளித்திருந்தது. இவர் விசா காலம் முடிவடைந்த பின்பும் மேற்கு வங்கத்தில் தங்கியிருந்தார். இது குறித்து குடியுரிமை துறை, உள்துறைக்கு தகவல் அனுப்பியது. இதனால் அப்துல் நூர், உடனடியாக இந்தியாவை விட்டு வெளியேற வேண்டும் என உள்துறை அமைச்சகம் நேற்று உத்தரவிட்டது.
பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி