பெங்களூரு: கர்நாடகாவில் 2வது கட்டமாக நடக்கும் 14 தொகுதிகளில் ஷிவமொக்கா தொகுதி நட்சத்திர தகுதியை பெற்றுள்ளது. இங்கு முன்னாள் முதல்வர்கள் பங்காரப்பாவின் மகன் மது பங்காரப்பாவும், எடியூரப்பாவின் மகன் ராகவேந்திராவும் போட்டியிடுவதின் மூலம் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ராகவேந்திராவை ஆதரித்து நேற்று முன்தினம் பிரசாரம் செய்வதற்காக எடியூரப்பா ஹெலிகாப்டரில் சென்றபோது, ஷிவமொக்காவில் அவர் பயணம் செய்த ஹெலிகாப்டரை தேர்தல் அதிகாரிகள் சோதனை நடத்தினர். இது மிகவும் பரபரப்பு ஏற்படுத்தியது.இந்நிலையில், மஜத வேட்பாளராக போட்டியிடும் மதுபங்காரப்பாவை ஆதரித்து பிரசாரம் செய்வதற்காக பெங்களூருவில் இருந்து ஹெலிகாப்டரில் ஷிவமொக்கா மாவட்டத்துக்கு முதல்வர் குமாரசாமி நேற்று வந்து இறங்கினார். அப்போது அங்கு வந்த தேர்தல் அதிகாரிகள் ஹெலிகாப்டரை சோதனை செய்ய வேண்டும் என்றனர். அதற்கு குமாரசாமி மறுப்பு கூறவில்லை. அதை தொடர்ந்து 20 நிமிடம் சோதனை நடத்திய பின் குமாரசாமியுடன் வந்த கட்சி நிர்வாகிகள், அரசு அதிகாரிகள் கொண்டுவந்த பைகளையும் அதிகாரிகள் சோதனை செய்தனர். பின் அந்த ஹெலிகாப்டரை முதல்வர் பயன்படுத்த அனுமதி வழங்கினர்.
முன்னதாக, கடந்த 15ம் தேதி சித்ரதுர்காவில் பிரதமர் மோடி பிரசாரம் செய்ய ஹெலிகாப்டரில் வந்தார். அப்போது, ஹெலிகாப்டரில் இருந்து சில இரும்பு பெட்டிகள் இறக்கப்பட்டு கொண்டு செல்லப்பட்டன. பெட்டியில் என்ன இருந்தது என விசாரிக்க கோரி தேர்தல் ஆணையத்திடம் காங்கிரஸ் புகார் அளித்தது. ஆனால் எந்த நடவடிக்கையும் இதுவரை எடுக்கப்பட்டவில்லை. ஆனால், குமாரசாமி ஹெலிகாப்டரில் மட்டும் சோதனை நடத்தப்பட்டது சர்ச்சையாகி உள்ளது. இதே போல ஒடிசாவின் ரூர்கேலாவில் அம்மாநில முதல்வர் நவீன் பட்நாயக்கின் ஹெலிகாப்டரிலும் தேர்தல் பறக்கும்படை அதிகாரிகள் நேற்று திடீர் சோதனை நடத்தினர்.
பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி