வடக்கு மும்பையில் காங்கிரஸ் கட்சி சார்பாக நடிகை ஊர்மிளா மாடோன்கர் போட்டியிடுகிறார். கடந்த திங்கட்கிழமை ஊர்மிளா, போரிவலி ரயில் நிலையம் அருகில் பிரசாரம் செய்தபோது பாஜ.வினர் சிலர் புகுந்து குழப்பத்தை விளைவித்தனர். இதனால் இரு கட்சியினருக்கும் இடையே கைகலப்பு ஏற்பட்டது. இச்சம்பவத்தை தொடர்ந்து ஊர்மிளா பாஜ.வினரால் தனக்கு ஆபத்து இருப்பதாக போலீசில் புகார் செய்தார். இதைத் தொடர்ந்து அவருக்கு தேர்தல் முடியும் வரை போலீஸ் பாதுகாப்பு கொடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இரண்டாவது முறையாக ஊர்மிளாவின் பிரசாரத்தை சீர்குலைக்க பாஜ.வினர் முயன்றுள்ளனர். தீன்தோஷியில் ஊர்மிளா தனது பிரசார வாகனத்தில் தொண்டர்களுடன் பிரசாரம் செய்து கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த பாஜ.வினர் சிலர், மோடி, மோடி என்று கோஷமிட்டனர். இதனால் மோதல் ஏற்படும் அபாயம் ஏற்பட்டது. ஆனால் பாதுகாப்புக்கு நின்ற போலீசார் அதனை தடுத்துவிட்டனர்.
பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி