×

கீழ ஆம்பூரில் கிடப்பில் போடப்பட்ட சாலை பணியால் கிராம மக்கள் அவதி

கடையம்: கடையம் அருகே கிடப்பில போடப்பட்ட சாலை பணியால் கிராம மக்கள் கடுமையாக அவதிப்படுகின்றனர். சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதுவிஷயத்தில் தனிக்கவனம் செலுத்தி விரைந்து நடவடிக்கை எடுப்பார்களா? என்ற எதிர்பார்ப்பு பலமாக எழுந்துள்ளது. கடையம் அருகே கீழ ஆம்பூர் ஊராட்சி பகுதியில் முறையான பராமப்பின்றி ரயில் நிலைய சாலை சிதலமைந்து காணப்பட்டது. இதுகுறித்த தினகரனில் படத்துடன் செய்தி வெளியானதை அடுத்து சாலை அமைக்கும் பணி கடந்த 6 மாதங்களுக்கு முன் துவங்கியது. இதற்காக ஜல்லி அமைத்து மணல் நிரப்பப்பட்டு 6 மாதங்களாகியும் இதுவரை தார் சாலை போடாமல் அப்படியே கிடப்பில் போட்டுள்ளனர்.

இவ்வாறு கிடப்பில் போடப்பட்ட சாலை அமைக்கும் பணியால் கீழ ஆம்பூர், கருத்தபிள்ளையூர், வடமலைசமுத்திரம் உள்ளிட்ட பல்வேறு கிராம மக்கள், ரயில் பயணிகள் தினமும் கடுமையாக அவதிப்படுகின்றனர். இதே போல் கீழ ஆம்பூர் அருகே கடனா நதி அணைக்கும் செல்லும் வழியில் 6 மாதங்களுக்கு முன் துவங்கிய சாலை அமைக்கும் பணியும் கிடப்பில் போடப்பட்டுள்ளதால் மக்கள் சிரமப்படுகின்றனர். எனவே, சம்பந்தபட்ட அதிகாரிகள் இனியாவது இதுவிஷயத்தில் தனிக்கவனம் செலுத்தி கிடப்பில் போடப்பட்ட சாலை பணிகளை விரைந்து முடிக்க முன்வர வேண்டும் என்பதே அனைவரது எதிர்பார்ப்பு.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : road accident ,Ambur , Kadiyam, road, villagers
× RELATED ஆம்பூர் அருகே தேசிய நெடுஞ்சாலையில்...