தோகைமலை: தோகைமலை பகுதியில் முன்கூட்டியே ஆரம்பித்த கொளுத்தும் வெயில்தாக்கத்திலும் மல்லிகை பூப்பறிக்கும் பணியில் விவசாயிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். கரூர் மாவட்டம் தோகைமலை பகுதியில் உற்பத்தியாகும் மல்லிகை பூக்கள், திருச்சி பூ மார்க்கெட்டில் சிறப்பு வாய்ந்ததாகும். தோகைமலை ஒன்றியத்தில் நெய்தலூர், சேப்ளாப்பட்டி, முதலைபட்டி போன்ற ஊராட்சி பகுதிகளில் அதிகமாவும், ஆர்சம்பட்டி, தளிஞ்சி, ஆலத்தூர், பாதிரிபட்டி, தோகைமலை மற்றும் சூரியனூர், நங்கவரம் உட்பட பல்வேறு பகுதிகளில் கணிசமாகவும் மல்லிகைபூ சாகுபடியை விவசாயிகள் செய்து வருகின்றனர்.
தோகைமலை பகுதியில் கடந்த சில ஆண்டுகளாக பருவமழை சரியாக பெய்யாத நிலையில் நிலத்தடி நீர் மட்டம் வெகுவாக குறைந்து விட்டது. இதனால் விவசாய நிலங்களில் பயிர் வகைகள் உள்பட பல்வேறு பயிர்களுக்கு போதிய தண்ணீர் இல்லாமல் விவசாயிகள் சாகுபடி செய்வதை வெகுவாக குறைத்துவிட்டனர். தற்போது ஆழ்குழாய் அமைத்துள்ள விவசாயிகள் மட்டும் சொற்பமான பயிர்களைக் கொண்டு விவசாயம் செய்துவருகின்றனர். இதன் ஒருபகுதியாக மல்லிகை செடிக்கு வாரத்திற்கு ஒருமுறை தண்ணீர் விட்டால் போதும் என்பதாலும், மாசிமாதம் முதல் கார்த்திகை மாதம் வரை 10 மாதங்களாக மல்லிகை பூசாகுபடியில் நல்ல மகசூல் கிடைப்பதாலும் மல்லிகை செடியை பயிரிட விவசாயிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
ஒரு கிலோ ரூ.100 முதல் விஷேச காலங்களில் ரூ.1500 வரை விற்பனை நடைபெறுகிறது. இதனால் விவசாயிகள் இச்செடிகளை நல்ல முறையில் பராமரித்து சாகுபடி செய்து வருகின்றனர். இந்நிலையில் தோகைமலை பகுதிகளில் முன்கூட்டியே வெயில் தாக்கம் அதிகரித்து வருவதால் மல்லிகை பூக்களை பகல் நேரங்களில் பறிப்பதை தவிர்த்து வருவதாக தெரிவித்தனர். இதனால் பெரும்பாலான விவசாயிகள் இரவு நேரங்களில் தலையில் பேட்டரி லைட்டுகளை கட்டிக்கொண்டு பூக்களை பறித்து வருகின்றனர்.
ஆனால் ஆட்கள் பற்றாக்குறையால் பல பகுதிகளில் பகல் நேரத்திலும் பூக்களை பறித்து வருவதால் வெயில் தாக்கத்திற்கு ஓலை தொப்பியை தலையில் அணிந்து கொண்டு பூக்களை பறிக்கின்றனர். மல்லிகைப்பூ பறிக்கும் பணியாளர்களுக்கு ஒரு மணி நேரம் என்ற அடிப்படையில் அல்லது லிட்டர் கணக்கில் ஊதியம் வழங்குவதாக விவசாயிகள் கூறுகின்றனர். மழை பெய்யாமல் தொடர்ந்து வெயில்தாக்கம் அதிகரித்து வந்தால் விவசாயத்திற்கு தண்ணீர் இல்லாமல் பலஆண்டுகளாக பராமரித்து வந்த மல்லிகை செடிகள் கருகி விடும் என்றும் விவசாயிகள் வேதனையுடன் தெரிவித்தனர்.
பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி