×

விவசாயம் செழிக்க வேண்டி வெற்றிலைப் பிரி திருவிழா

மேலூர்: மதுரை மாவட்டம், மேலூர் அருகே வெள்ளலூர் கிராமத்தை தலைமையிடமாக கொண்டது வெள்ளலூர் நாடு. இதில் ஐந்து மாகாணங்கள் என வெள்ளலூர், அம்பலகாரன்பட்டி, உறங்கான்பட்டி, மலம்பட்டி மற்றும் குறிச்சிபட்டி குறிப்பிடப்படும். இங்குள்ள 60க்கும் மேற்பட்ட கிராம மக்கள் இணைந்து கொண்டாடும் வெற்றிலை பிரி திருவிழா வெள்ளலூர் மந்தையில் நேற்று காலை நடந்தது. வெள்ளலூர் மந்தை கருப்பண சாமி கோயிலில் 11 கரைகளை சேர்ந்த 22 அம்பலகாரர்கள், 22 இளங்கச்சிகள் தலைமையில் கிராம மக்கள் கூடினர்.  சுமார் 200 கிலோ வெற்றிலை கொண்டு வரப்பட்டது. இவை 11 கரை அம்பலகாரர்களுக்கு ஒரு பங்காகவும், இதர மக்களுக்கு ஒரு பங்காகவும் பிரிக்கப்பட்டது.

அவற்றை பெற்று கொண்ட அம்பலகாரர்கள் மேலும் கிலோ கணக்கில் வெற்றிலை சேர்த்து, தங்கள் கிராமத்தில் உள்ள அனைத்து மக்களுக்கும் பாக்குடன் வழங்கினர். இது 10 ஆயிரம் குடும்பங்களுக்கு பிரித்து வழங்கப்பட்டது. அவற்றை பெற்றுக் கொண்ட கிராம மக்கள், தங்கள் வீடுகளில் நாழியில் வைத்து புது நெல், கலப்பை மற்றும் மாடுகளை வைத்து சாமி கும்பிட்டனர். பின் சேர்த்து வைக்கப்பட்ட சாணி குப்பைகளுடன் தங்கள் வயலுக்கு சென்று, இந்த ஆண்டிற்கான விவசாய பணிகளை மேற்கொண்டனர். விவசாயம் செழிக்கவும், மத நல்லிணக்கத்திற்காகவும் இந்த விழா ஆண்டுதோறும் கொண்டாடப்படுவது குறிப்பிடத்தக்கது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : farm , Agriculture, betel, festival
× RELATED கிண்டி பாம்பு பண்ணையில் 3டி தொழில்நுட்ப வசதி