காங்கிரஸ் வேட்பாளர் வசந்தகுமார் உறவினரிடம் வருமான வரித்துறை சோதனை நடத்தும் அளவுக்கு நான் கீழ்த்தரமான அரசியல் செய்யமாட்டேன் என்று பொன். ராதாகிருஷ்ணன் விளக்கமளித்துள்ளார். கன்னியாகுமரி மக்களவை தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் எச்.வசந்தகுமாரின் மைத்துனரும், அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினருமான காமராஜ், நாகர்கோவில் வடசேரியில் உள்ள ஓட்டலில் தங்கி உள்ளார். அவரது அறையில் நேற்று முன்தினம் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனையிட்டனர். இந்த சோதனை குறித்து காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் ஆனந்த சீனிவாசன் கூறுகையில், காமராஜின் அறையில் நடந்த சோதனைக்கு பொன். ராதாகிருஷ்ணன்தான் காரணம் என்றார்.
இந்தநிலையில் நேற்று காலை நாகர்கோவிலில் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்த பின் பொன். ராதாகிருஷ்ணன் நிருபர்களிடம் கூறியதாவது:காங்கிரஸ் வேட்பாளர் வசந்தகுமாரின் உறவினரிடம் நடந்த வருமான வரித்துறை சோதனைக்கு நான்தான் காரணம் என கூறியிருப்பதாக பத்திரிகை செய்தி மூலம் அறிந்தேன். இந்த கீழ்த்தரமான அரசியல் நான் செய்ய மாட்டேன். பிரதமர் மோடி தான் தமிழர்களின் ஒட்டு மொத்த காவலர் ஆவார். இலங்கை தமிழர்கள் மட்டுமல்ல, உலகம் முழுவதும் இருக்க கூடிய தமிழர்கள் நலன் பேணப்பட வேண்டும் என்றால் அது மோடியால் மட்டுமே முடியும். இவ்வாறு அவர் கூறினார்.
பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி