×

படுகொலையின் நூற்றாண்டு நினைவு தினம் ஜாலியன் வாலாபாக்கில் ராகுல் அஞ்சலி

புதுடெல்லி: ஜாலியன் வாலாபாக் நூற்றாண்டு நினைவு தினத்தை முன்னிட்டு, பஞ்சாப் மாநிலம் அமிர்தசரசில் உள்ள நினைவிடத்தில் காங்கிரஸ் தலைவர் ராகுல், இந்தியாவுக்கான இங்கிலாந்து தூதர் டொமினிக் அஸ்கித் ஆகியோர் நேற்று மலரஞ்சலி செலுத்தினார். ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் சுதந்திர போராட்டத்தை ஒடுக்க, கடந்த 1919ம் ஆண்டில் ரவுலட் சட்டம் அமலாக்கப்பட்டது. இதை எதிர்க்கும் வகையில், பஞ்சாப் மாநிலம் அமிர்தசரசில் உள்ள ஜாலியன் வாலாபாக் என்ற இடத்தில் ஆயிரக்கணக்கான சீக்கியர்கள் ஏப்ரல் 13ம் தேதி கூடினர். அங்கு, பிரிட்டிஷ் இந்திய ராணுவப்படையுடன் வந்த கர்னல் ரெஜினால்ட் டயர் என்பவர், போராட்டக்காரர்கள் மீது துப்பாக்கி சூடு நடத்த உத்தரவிட்டார்.  இதில், 1600க்கும் மேற்பட்டோர் பலியாகினர்.

இந்த கொடூர சம்பவத்தின் நூற்றாண்டு நினைவு தினம் நேற்று அனுசரிக்கப்பட்டது.  அமிர்தரசில் உள்ள ஜாலியன் வாலாபாக் நினைவிடத்தில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி நேற்று மலரஞ்சலி செலுத்தினார். அவருடன் பஞ்சாப் முதல்வர் அம்ரிந்தர் சிங் உடனிருந்தார். இருவரும் நேற்று முன்தினம் இரவு பொற்கோயிலில் வழிபட்டனர். வெட்கக்கேடான செயல்: ஜாலியன் வாலாபாக் நூற்றாண்டு நினைவு தினம் அனுசரிக்கப்படுவதை முன்னிட்டு, இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் கடந்த 10ம் தேதி பேசிய பிரதமர் தெரசா மே, ஜாலியன் வாலாபாக் படுகொலை சம்பவத்துக்கு மன்னிப்பு கோரினார்.

பிரிட்டிஷ் இந்திய வரலாற்றில் இது வெட்கக்கேடான சுவடு என அவர் குறிப்பிட்டார். இந்நிலையில், அமிர்தசரசில் உள்ள நினைவிடத்தில், இந்தியாவுக்கான இங்கிலாந்து தூதர் டொமினிக் அஸ்கித் நேற்று அஞ்சலி செலுத்தினார். அங்குள்ள பார்வையாளர் புத்தகத்தில், ‘100 ஆண்டுகளுக்கு முன் நடந்த இந்த படுகொலை சம்பவம், பிரிட்டிஷ் இந்திய வரலாற்றில் வெட்கக்கேடான செயல். நடந்த சம்பவத்துக்கு வருந்துகிறோம்’ என குறிப்பிட்டார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Rahul Anjali ,Jallianwala , Massacre, Century, Day, Jallianwablock, Rahul, Anjali
× RELATED மறைந்த முன்னாள் பிரதமர் ராஜிவ்காந்தி...