சிவகங்கை: சிவகங்கை சண்முகராஜா கலையரங்கில் சிவகங்கை மக்களவை தொகுதி மக்கள் நீதி மய்யம் கட்சி வேட்பாளர் கவிஞர் சினேகனுக்கு வாக்கு கேட்டு அக்கட்சி தலைவர் கமல்ஹாசன் பேசியதாவது: சிவகங்கை மண் பிரசித்தி பெற்றது என்றார்கள். சிவகங்கையில் நின்று வெற்றி பெற்றவர்கள்தான் இந்திய அளவில் பிரசித்தி பெற்றார்கள். நான் கட்சி ஆரம்பிக்கும் போது இந்த குழந்தை எழுந்திருக்குமா, நடக்குமா என்றார்கள். தற்போது வீறு நடை போடுகிறது. எங்களை விமர்சித்தவர்கள் எங்கள் பின்னால் வருகின்றனர். நாங்கள் ஆட்சிக்கு வரும்போது பல் இல்லாத லோக்பாலை அகற்றிவிட்டு பல் கட்டிய லோக்பாலை கொண்டு வருவோம்.
எங்கள் கட்சி வேட்பாளர் எம்பியானால், அவர் மக்களுக்கு சேவை செய்யாவிட்டால் ராஜினாமா செய்ய வைப்போம். மக்களுக்கு போய் சேருகிறது என்பதற்காக நேர்மையாக வரி கட்டுபவன் நான். கண்மாய், குளங்கள், ஏரிகளை தூர்வாரி 50 லட்சம் வேலைவாய்ப்புகளை உருவாக்குவோம். சுதந்திரமடைந்த பிறகு ஜாலியன் வாலாபாக் படுகொலை போல் தூத்துக்குடியில் பெண்கள் உள்ளிட்டோரை சுட்டுத்தள்ளியுள்ளனர். இதற்கு பதில் சொல்லியே ஆக வேண்டும். ஆலைகள் மக்கள் உயிரை பறிக்கிறது என்றால் அப்படிப்பட்ட ஆலைகள் தேவையில்லை. ஆம்புலன்ஸ், போலீஸ் வாகனங்களில் பணம் கடத்துவதாக செய்தி வருகிறது. காவல்துறையை ஏவல் துறையாக மாற்ற முயற்சி நடக்கிறது. இவ்வாறு அவர் பேசினார்.
பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி