×

தென்மாநில கட்சிகள் கூட்டணிக்கு கைகொடுக்காததால் பாஜ வரலாற்றில் அதிகபட்சமாக 440 வேட்பாளர்கள் போட்டி

புதுடெல்லி: கடந்த 2014ம் ஆண்டு மக்களவை தேர்தலில் பாஜ 282 தொகுதிகளில் வெற்றி பெற்று தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைத்தது. மொத்தமுள்ள 543 தொகுதிகளில் பாஜ தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி மட்டும் 336 இடங்களில் வெற்றது. இத்தனை இடங்களை பாஜ வென்றதற்கு ஒரு முக்கிய காரணம், மத்திய அரசை தீர்மானிக்கும் 10 பெரிய மாநிலங்களில் 7 மாநிலங்களில் பெரும்பான்மையான இடத்தை அக்கட்சி வென்றதுதான். குறிப்பாக உத்தரபிரதேசம், பீகார், குஜராத், ஆந்திரா, மத்திய பிரதேசம், ராஜஸ்தான், மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களில் தான் பாஜ கூட்டணி அதிக இடங்களை கைப்பற்றியது. நாட்டிலுள்ள மொத்த 543 தொகுதிகளில்  273 மக்களவை தொகுதிகள் மேற்கண்ட 7 மாநிலங்களிலும் அடங்கும். அதாவது, மொத்த தொகுதிகளில் 36 சதவீதம்.

அன்றைய பாஜ கூட்டணியில், சிவசேனா-18, தெலுங்குதேசம்-16, லோக்ஜனசக்தி-6, சிரோன்மணி அகாலிதளம்-4, ராஷ்ட்ரிய லோக் சமதா கட்சி-3, அப்னாதளம்-2, பாமக-1, ஸ்வாபிமான் பக்ஷா-1, என்.ஆர். காங்கிரஸ்-1, நாகா மக்கள் முன்னணி-1, தேசிய மக்கள் கட்சி-1 ஆகிய இடங்களை கைப்பற்றின. ஆனால், இன்று பாஜ கூட்டணியில் இருந்த தெலுங்குதேசம், ராஷ்ட்ரிய லோக் சமதா கட்சி ஆகியன, கூட்டணி உறவை முறித்துக் கொண்டன. அதனால், தெலுங்கு தேசம் ஆந்திரவில் தனித்தும், ராஷ்ட்ரிய லோக் சமதா கட்சி பீகாரில் காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி வைத்து தேர்தலை சந்திக்கின்றன. கடந்த தேர்தலில் வெற்றியை தீர்மானித்த மேற்கண்ட 10 பெரிய மாநிலங்களில் 70 சதவீதத்திற்கும் அதிகமான தொகுதிகளை பாஜ கூட்டணி இழக்க வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.

மேற்கண்ட மாநிலங்களில் பாஜ பெரும்பான்மை பலம் பெற வேண்டும் என்றால் குறைந்தது இங்கு 196 தொகுதிகளையாவது கைப்பற்றியாக வேண்டும். ஆனால், அங்குள்ள சூழ்நிலை அப்படி இல்லை. கடந்தாண்டு டிசம்பரில் மத்தியபிரதேசம், ராஜஸ்தான், சட்டீஸ்கர் ஆகிய மாநிலங்களில் நடந்த சட்டசபை தேர்தலில், ஆளும் பாஜ தோல்வியுற்று  மாநிலத்தில் ஆட்சியை இழந்து உள்ளது. இந்த மாநிலங்களில் காங்கிரஸ் கட்சி ஆட்சியில் உள்ளது. மத்திய பிரதேசத்தில் கடந்த மக்களவை தேர்தலில் மொத்தம் உள்ள 29 தொகுதிகளில் பாஜ 27 தொகுதிகளை கைப்பற்றியது. ஆனால், இந்தத் தேர்தலில் பாஜ தனது வெற்றிகளை தக்கவைக்குமா என்பது சந்தேகத்திற்கு இடமாகத்தான் உள்ளது. உத்தரபிரதேச மாநிலத்தை பொறுத்தவரை மொத்தமுள்ள 80 தொகுதிகளில் பாஜ கட்சி 71 தொகுதிகளை கைப்பற்றி இருந்தது.

ஆனால் இந்த முறை அங்கு கூட்டணி நிலவரங்கள்  மாறிவிட்டன. முன்னாள் முதல்வர் மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சியும், முன்னாள் முதல்வர் அகிலேஷ் யாதவின் சமாஜ்வாதி கட்சியும் கூட்டணி வைத்து போட்டியிட உள்ளன. காங்கிரஸ் தனித்து விடப்பட்டு உள்ளது. மாயாவதி - அகிலேஷ் கூட்டணி ஆளும் பாஜவுக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்த வாய்ப்புள்ளதாக கணிப்புகள் கூறுகின்றன. ஆந்திராவை பொறுத்தவரை தெலுங்கு தேசம் கட்சியுடன் பாஜ கூட்டணி வைத்து கடந்த தேர்தலில் போட்டியிட்டதால், அம்மாநிலத்தில் பெரும்பான்மை இடங்களை கைப்பற்றின. ஆனால், இந்த கட்சிகளின் கூட்டணியில் முறிவு ஏற்பட்டுள்ளதால், பாஜ ஆந்திராவில் தனித்து போட்டியிட வேண்டிய கட்டாயத்துக்கு தள்ளப்பட்டுள்ளது. அதேநிலை தான் தெலங்கானாவிலும், ராஷ்ட்ரிய ஜனதா தளத்துடன் பாஜ கூட்டணி இல்லாததால், இம்மாநிலத்திலும் தனித்தே போட்டியிடுகிறது.

கிட்டதிட்ட மேற்கண்ட இரு மாநிலங்களையும் சேர்த்து 42 வேட்பாளர்களை இந்த தேர்தலில் பாஜ இறக்கியுள்ளது. அதே 2014 தேர்தலில் வெறும் 12 இடங்களில் மட்டுமே பாஜ போட்டியிட்டது குறிப்பிடத்தக்கது. பீகாரில் கடந்த தேர்தலில் ஐக்கிய ஜனதா தளத்தை எதிர்த்து போட்டியிட்ட பாஜ, இந்த தேர்தலில் முதல்வர் நிதிஷ்குமாருடன் கூட்டணி வைத்து களம் காணுகிறது. மகாராஷ்டிராவில் பாஜ - சிவசேனா கூட்டணி இந்த தேர்தலிலும் தொடர்ந்தாலும், கடந்த முறை வென்ற தொகுதிகளை மீண்டும் தக்கவைக்க முடியாத சூழ்நிலையே நிலவுகிறது. மேலும், கடந்த தேர்தலில் ராஜஸ்தான் (25), குஜராத் (26), டெல்லி (7), இமாச்சலப் பிரதேசம் (4), கோவா (2), உத்தரகாண்ட் (5) என 6 மாநிலங்களில் மட்டும் மொத்தமுள்ள 69 தொகுதிகளையும் பாஜ கைப்பற்றியது.

மேற்கண்ட மாநிலங்களில் டெல்லி, ராஜஸ்தான் தவிர மற்ற மாநிலங்களில் பாஜ ஆட்சிதான் உள்ளது. இந்நிலையில், ‘2019 மக்களவைத்  தேர்தலில் தேசிய அளவில் பாஜவுக்கு எதிராக வலுவான கூட்டணியை அமைக்க வேண்டும்’ என எதிர்க்கட்சிகள் முடிவு செய்தாலும், எதிர்க்கட்சிகள் இடையே கூட்டணி குறித்த தெளிவான முடிவுகள் எடுக்கப்படாததால், பாஜவுக்கு எதிராக திரண்ட காங்கிரஸ், ஆம்ஆத்மி, கம்யூ., திரிணாமுல், தெலுங்குதேசம் போன்ற கட்சிகள் அந்தந்த மாநிலங்களில் தனித்தே களம் காணுகின்றன. ‘பிரதமர் வேட்பாளர் யார் என்ற ஆலோசனை, பிரிவினையை ஏற்படுத்தி, கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்தும் என்பதால்  தேர்தலுக்கு பிறகு யார் பிரதமராக வேண்டும் என்பதை தீர்மானித்து கொள்ளலாம்’ என்ற முடிவுக்கு எதிர்கட்சிகள் வந்துள்ளன.

நாடு முழுவதும் ஆளும் பாஜவுக்கு எதிரான சூழல் நிலவி வருவதால், கடந்த தேர்தலில் கைகொடுத்த 10 மாநிலங்களிலும் மீண்டும் அதே வெற்றியை பெற முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. அதனால், இந்த தேர்தலில் பாஜ தலைமை அதிக இடங்களில் போட்டியிடுகிறது. இதுவரை வெளியிடப்பட்ட வேட்பாளர்கள் பட்டியலில், 408 பேரின் பெயரை வெளியிட்டுள்ளது. இன்னும் 30க்கும் மேற்பட்ட வேட்பாளர்கள் பெயர்கள் வெளியிட வேண்டிய நிலையில் உள்ளது. கடந்த தேர்தலில் பாஜ 427 இடங்களில் வேட்பாளர்களை நிறுத்தியது. அதேபோல், 2009ல் 433 வேட்பாளர்கள், 2004ல் 364 வேட்பாளர்கள், 1999ல் 339 வேட்பாளர்களை களம் இறக்கியது. பாஜ வரலாற்றில் முன்பு எப்போதும் இல்லாத அளவிற்கு 440 வேட்பாளர்கள் வரை களம் இறக்க பாஜ முடிவு செய்துள்ளதற்கு காரணம், தென்மாநிலங்களில் பாஜவுக்கு செல்வாக்கு இல்லாததது மற்றும் அம்மாநில கட்சிகள் பாஜவுடன் கூட்டணி வைக்க விரும்பாதது ஆகியனவாகும். இதில், தமிழகத்தில் அதிமுக, கர்நாடகாவில் மட்டும் சில கட்சிகள் பாஜவுட்ன கூட்டணி வைத்து தேர்தலை சந்திக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : parties ,Bhajan ,coalition ,Southern , BJP, Parliamentary Elections, Lok Sabha Election, Alliance Parties, List of Candidates, Modi, Amit Shah
× RELATED இந்தியா கூட்டணி கட்சிகள் கலந்தாலோசனை...