×

நாகர்கோவிலில் துக்கம் விசாரிக்க வந்த சென்னை குடும்பத்தினரை அலைக்கழித்த பறக்கும்படை

நாகர்கோவில் : சென்னையில் உள்ள ஒரு குடும்பத்தினர், நாகர்கோவில் அனந்தநாடார் குடியிருப்பில் இறந்த வீட்டுக்கு காரில் வந்தனர்.  துக்கம் விசாரித்து விட்டு இன்று காலை மீண்டும் ஊருக்கு திரும்பினர். ராஜாக்கமங்கலம் அருகே வந்த போது அவர்களது காரை பறக்கும்படை அதிகாரிகள் சோதனை செய்தனர். காருக்குள் 2 பெண்கள் உள்பட 4 பேர் இருந்தனர். இவர்கள் 2 குடும்பத்தை சேர்ந்தவர் ஆவர். ஒருவரது கை பையில் ரூ.30 ஆயிரமும், மற்றொருவரது கை பையில் ரூ.25 ஆயிரம் பணம் இருந்துள்ளது. இதனை பறக்கும்படையினர் பறிமுதல் செய்தனர். அப்போது காரில் இருந்த குடும்பத்தினர், நாங்கள் இறந்த வீட்டுக்கு சென்று விட்டு வீட்டிற்கு திரும்பி கொண்டிருக்கிறோம் என்றனர். இதையடுத்து பறக்கும்படை அதிகாரிகள் அவர்களை விடுவித்ததாக கூறப்படுகிறது.

இதுதொடர்பான தகவல் அகஸ்தீஸ்வரம் தாசில்தாருக்கு கிடைத்துள்ளது. தாசில்தார்  தரப்பில், அவர்களை  விடுவிப்பதற்கு யார் அதிகாரம் அளித்தது என்று கேட்டு  பறக்கும்படை அலுவலர்களை கேள்வி கேட்டதாக தெரிகிறது. இதையடுத்து  பறக்கும்படை அதிகாரி அந்த குடும்பத்தினரை காருடன் மீண்டும் பிடித்தார். பின்னர் நாகர்கோவிலில் உள்ள மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு அழைத்து வந்தனர். பின்னர் அங்கு  பறக்கும்படையினர் அதிகாரிகளை சந்தித்து விவரத்தை தெரிவித்தனர். தொடர்ந்து 2 குடும்பத்தினரையும் காரில் ஏற்றி அகஸ்தீஸ்வரம் தாலுகா அலுவலகத்திற்கு கொண்டு வந்தனர். அப்போதும் அவர்கள் நாங்கள் 2 குடும்பமாக சொல்கிறோம். 2 பேரிடமும் இருந்து தனித்தனியாக கைப்பற்றிய பணம் தான் ரூ.55 ஆயிரம். காருக்கு டீசல் போட ரூ.7 ஆயிரம் வரை செலவாகும் என்று முறையிட்டனர்.

இதன்பின்னரும் பறக்கும்படையினர் அவர்களை விடுவிக்கவில்லை. காரில் இருந்த குடும்பத்தினர், மரணமடைந்தவரின் வீட்டில் உள்ள உறவினர் ஒருவரை வரவழைத்தனர். அப்போதும் பறக்கும்படையினர் தாசில்தார் தான் வரசொன்னார். அவரிடம் கேட்டு விடுவிக்கலாம் என்று தெரிவித்துள்ளனர். தாசில்தார் அங்கு இல்லை. இதனால் சென்னையை சேர்ந்தவர்கள் அங்கும் இங்குமாக அலைக்கழிக்கப்பட்டனர். இந்தநிலையில் பறக்கும்படை அதிகாரிகள் அந்த குடும்பத்தினரை சப் கலெக்டர் விஷ்ணுசந்திரன் முன்னிலையில் ஆஜர்படுத்தினர். பின்னர் நடந்த விசாரணைக்கு பின் அவர்கள் விடுவிக்கப்பட்டனர். கைப்பற்றப்பட்ட பணமும் திரும்பி கொடுக்கப்பட்டது. இந்த சம்பவத்தால் கலெக்டர் அலுவலக வளாகத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Nagarcoil ,Chennai , Nagercoil ,inquire , Chennai familynai family
× RELATED தொழில்நுட்ப கோளாறால் சென்னையில்...