×

பிரதமர் மோடிக்கு ரஷ்யாவின் உயரிய விருதான ‘புனித ஆண்ட்ரூ’ விருது: உத்தரவில் கையெழுத்திட்டார் அதிபர் புதின்

மாஸ்கோ: இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு ரஷ்யாவின் உயரிய விருதான புனித ஆண்ட்ரூ விருது வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பிரதமர் மோடிக்கு ஐ.நா மற்றும் பிற நாடுகள் இதுவரை 8 சர்வதேச விருதுகளை வழங்கி கவுரவித்துள்ளது. பிளாஸ்டிக் பயன்பாட்டை ஒழிக்க முயற்சி எடுத்தல், சூரிய ஒளிமின்சாரத்தை பயன்படுத்த ஊக்கப்படுத்துதல், ஆகியவற்றுக்காக, பிரதமர் நரேந்திர மோடிக்கு, ஐக்கிய நாடுகள் சபை மிக உயரிய விருதான சுற்றுச்சூழல் விருது(சாம்பியன்ஸ் ஆப் எர்த்) வழங்கிக் கவுரவித்தது.

உலகின் சுற்றுச்சூழல் பிரச்சினைகளை அறிந்து, அதைக் களைவதற்கு தேவையான நடவடிக்கைகளை மிகவும் துணிச்சலுடனும், புத்தாக்கத்துடனும், தீவிரமான முயற்சிகளுடன் செய்தவர்களுக்கு இந்த விருது வழங்கப்படுகிறது. இதைத்தொடர்ந்து ஐக்கிய அரபு அமீரகமும் அந்நாட்டின் உயரிய விருதை பிரதமர் மோடிக்கு வழங்கியது. இருதரப்புக்கும் இடையே ராணுவ உறவுகளை உத்வேகப்படுத்தியவர் மோடி என்று புகழாரம் சூட்டிய ஐக்கிய அரபு அமீரகம், அவருக்கு அந்நாட்டின் உயரிய சயீத் விருதை அளித்தது. இதைத்தொடர்ந்து, ரஷ்ய நாட்டின் உயரிய விருதாக கருதப்படும் புனித ஆண்ட்ரூ தி அப்போஸ்டில் விருது, இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு வழங்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் இதற்கான உத்தரவில் கையெழுத்திட்டுள்ளார். ரஷ்யா-இந்தியா இடையே உறவை வலுப்படுத்த சிறப்பாக செயல்பட்டதற்காக, இந்த விருது பிரதமர் மோடிக்கு வழங்கப்படுவதாக விளாடிமிர் புதின் தெவித்துள்ளார். இதுகுறித்த அதிகாரப்பூர்வ தகவலை வெளியிட்டுள்ள இந்தியாவில் உள்ள ரஷ்ய தூதரகம், இந்தியா மற்றும் ரஷ்ய மக்கள் இடையே, நட்புறவு பேணப்படுவதிலும், மோடியின் பங்களிப்பு உள்ளதாக தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளது. சமீபத்தில் இந்திய வெளியுறவுத்துறை செயலாளர் விஜய் கோகலே ரஷ்யாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு, இந்தியா-ரஷ்யா உறவு மேம்பாடுக்காக தீவிர முயற்சி எடுத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : nominee ,Narendra Modi ,St. Andrew , St Andrew,PM Narendra Modi,Russia,Putin
× RELATED நாட்டு மக்கள் மரணம் அடைந்த பிறகும் வரி...