×

மோடி குறித்து இம்ரான் கான் சொல்லிய கருத்து வேறு விதமாக புரிந்து கொள்ளப்பட்டுள்ளது : பாக்., அரசு விளக்கம்!

இஸ்லமாபாத் : பிரதமர் மோடி குறித்து பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் பேசியதற்கு அந்நாட்டு அரசு விளக்கம் அளித்துள்ளது. இந்தியாவில் நடைபெறும் மக்களவை தேர்தலில் பாஜக மீண்டும் வெற்றி பெற்று ஆட்சியமைத்தால் காஷ்மீர் பிரச்சனைக்கு தீர்வு காண்பதற்கான அமைதி பேச்சுவார்த்தை நடத்த வாய்ப்பு உள்ளது என பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் கருத்து தெரிவித்திருந்தார். இதையடுத்து பிரதமர் மோடிக்கு ஆதரவாக இம்ரான்கான் பேசியிருப்பதாக காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்துள்ளன. மேலும் இம்ரான்கானுடன் மோடி ரகசிய உடன்பாடு வைத்திருந்ததாகவும், அது தற்போது தெரியவந்துள்ளது என்றும் தகவல் வெளியானது. நேற்று ஐதராபாத் மக்களவை தொகுதியில் போட்டியிடும் மஜ்லிஸ் கட்சி தலைவர் ஒவைசி இம்ரான் கான் பேசியதற்கு கண்டனம் தெரிவித்திருந்தார்.

மேலும் இந்திய தேர்தலில் தலையிட இம்ரான்கானுக்கு உரிமை இல்லை என்றும் அவர் கூறியிருந்தார். இந்நிலையில் இந்திய பொதுத்தேர்தல் குறித்து பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் சொல்ல வந்த கருத்து வேறு விதமாக புரிந்து கொள்ளப்பட்டுள்ளது என்று அந்நாட்டு அரசு விளக்கம் அளித்துள்ளது. இதுகுறித்து விளக்கமளித்துள்ள பாகிஸ்தான் வெளியுறவுத் துறை அமைச்சர் முகமது குரேஷி, இந்திய ஊடகங்கள் அனைத்து விஷயங்களையும் பதற்றத்துக்குரியவையாக மாற்றி விடுகின்றன. பிரதமர் இம்ரான் கான் கருத்தானது அவர் சொன்னதை தாண்டி வேறொரு முறையில் புரிந்து கொள்ளப்பட்டுள்ளது என கூறியுள்ளார். மோடி குறித்து பிரதமர் இம்ரானுக்கு என்ன கருத்து இருக்கும் என்பது அனைவரும் அறிந்த ஒன்று. இந்தியத் தேர்தலில் யார் வெற்றி பெற வேண்டும் என்பதை அந்நாட்டு மக்கள் மட்டுமே தீர்மானிப்பார்கள் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Imran Khan ,Pak ,Modi , Prime Minister Modi, Imran Khan, Pakistan government, Lok Sabha election
× RELATED சிறையில் உள்ள இம்ரானுடன் மனைவி சந்திப்பு