மதுரை : கடந்த ஜனவரி மாதம் ரஷ்யாவில் நடந்த கப்பல் விபத்தில் மாயமான 4 இந்தியர்கள் உயிருடன் உள்ளனரா என உயர்நீதிமன்ற மதுரைக்கிளை கேள்வி எழுப்பியுள்ளது. ரஷ்யா- கிரிமியா இடையே உள்ள கெர்ச் வளைகுடா பகுதியில் கடந்த ஜனவரி 21-ஆம் தேதி 2 சரக்கு கப்பல்கள் நிறுத்தப்பட்டு இருந்தன. இந்த இரு கப்பல்களும் மற்ற நாட்டை சேர்ந்தவர்கள் உட்பட இந்தியர்களும் இருந்தனர்.
அப்போது ஒரு கப்பலில் திரவ இயற்கை எரிவாயு இருந்தது. மற்றொரு கப்பலில் டேங்கர் இருந்தது. ஒரு கப்பலில் இருந்து மற்றொரு கப்பலில் உள்ள டேங்கருக்கு எரிவாயு மாற்றப்பட்டது. அப்போது, எதிர்பாராத விதமாக தீப்பிடித்து இரு கப்பல்களிலும் தீ மளமளவென பரவியது. இந்த விபத்தில் கப்பலில் இருந்த பலர் சிக்கினர். தகவல் அறிந்த ரஷ்ய கடற்படை மீட்பு குழுவினர் விரைந்து வந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர்.
இந்த விபத்தில் 6 இந்தியர்கள் உட்பட 14 பேர் பலியானதாக ரஷ்ய கடற்படை ஏஜென்சி தெரிவித்துள்ளது. மேலும், கப்பலில் இருந்த 20-க்கும் மேற்பட்டோர் கடலில் குதித்து உயிர் தப்பினர். இந்நிலையில் இந்த விபத்தில் மாயமான 4 இந்தியர்கள் உயிருடன் உள்ளனரா என உயர்நீதிமன்ற மதுரைக்கிளை கேள்வி எழுப்பியுள்ளது.மேலும் இது குறித்து உறுதி செய்து பதிலளிக்க வேண்டும் என வெளியுறவுத்துறை செயலருக்கு உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.
பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி