சென்னை: கடலூர் மாவட்டத்தில் அமைச்சர் சம்பத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து அருண்மொழித்தேவன் எம்.பி. ஆதரவாளர்கள், அவைத்தலைவராக இருந்த ஐயப்பன் ஆதரவாளர்கள் ஆகியோர் தனித்து செயல்படுகின்றனர். இவர்களில், ஐயப்பன் தனது மாவட்ட அமைப்பாளர் பதவியை ராஜினாமா செய்து அதிமுக தலைமைக்கு கடிதம் அனுப்பினார். அவருக்கு ஆதரவாக மகளிர் அணி மாவட்ட செயலாளர் நாகரத்தினமும் ராஜினாமா கடிதத்தை அனுப்பினார். இதையடுத்து, நேற்று முன்தினம் ஐயப்பனின் கடலூர் புதுநகர் வீட்டில் வருமான வரித்துறையினர், தேர்தல் பறக்கும் படையினர் சோதனை நடத்தினர். இதில் ஆவணங்கள், பணம் ஏதும் பறிமுதல் செய்யப்படவில்லை.
இந்தநிலையில், அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில், ``அதிமுகவின் கொள்கை-குறிக்கோள்களுக்கும் கோட்பாடுகளுக்கும் முரணான வகையில் செயல்பட்டதாலும், கட்சியின் கட்டுப்பாட்டை மீறி அவப்பெயர் உண்டாகும் விதத்தில் செயல்பட்டதாலும் கடலூர் கிழக்கு மாவட்டத்தை சேர்ந்த கோ.அய்யப்பன் (மாவட்ட அதிமுக அவைத்தலைவர், முன்னாள் எம்எல்ஏ), டி.நாகரத்தினம் (அதிமுக தலைமை செயற்குழு உறுப்பினர், மாவட்ட மகளிர் அணி செயலாளர்) ஆகியோர் இன்று முதல் அதிமுகவின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உட்பட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்கி வைக்கப்படுகிறார்கள்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி