பெங்களூரு: காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் குஷ்பு பெங்களூருவில் நேற்று அளித்த பேட்டி: தேர்தல் பிரசாரத்திற்காக தமிழகத்திற்கு வரும் பிரதமர் நரேந்திர மோடி புயல் பாதித்த போது எங்கே இருந்தார்? முருகனுக்கு அரோகரா என்று கோஷம் எழுப்புவதால் தமிழக மக்கள் அதையெல்லாம் மறந்து விடுவார்களா? கேரளாவிற்கு சென்று ஐயப்பா என்று கூறுவதாலும் பாஜவுக்கு வாக்குகள் கிடைத்து விடாது. பிரதமர் நரேந்திர மோடியின் இந்த நடிப்பை தமிழக மக்கள் மட்டும் இன்றி கேரளா, ஆந்திரா உள்ளிட்ட தென்னிந்திய மக்கள் நம்பப்போவதில்லை. தமிழகத்தில் பாஜ போட்டியிட்டுள்ள ஐந்து தொகுதியிலும் நோட்டாவை விட குறைவான வாக்கே கிடைக்கும்.
தமிழக பாஜ தலைவர் தமிழிசை, தூத்துக்குடியில் வெற்றி பெறுவேன் என்ற ரீதியில் கடலில் தாமரை மலர்ந்தே தீரும் என சமீபத்தில் கூறியிருந்தார். அதிமுகவில் விஞ்ஞானிகள் அதிகம். ஏரி நீர் ஆவியாக மாறுவதை தடுப்பதற்கு தெர்மாகோல் தடுப்பு அமைக்க நடந்த முயற்சி அனைவருக்கும் தெரியும். அதிமுகவுடன் பாஜ கூட்டணி அமைத்துள்ளதால் தமிழிசைக்கும் அதன் பாதிப்பு வந்து விட்டது. எந்த காலத்திலும் தமிழகத்தில் பாஜ காலூன்றாது. தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட 40 தொகுதிகளிலும் காங்கிரஸ் கூட்டணி வெற்றி பெறும். மத்தியில் காங்கிரஸ் பதவியேற்ற 10 மணி நேரத்தில் விவசாய கடன் ரத்து செய்யப்படும் என்றார்.
பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி