ஆந்திராவில் இன்று வாக்குப்பதிவு நடைபெற உள்ள நிலையில் தெலுங்கு தேசம் எம்பி வேட்பாளர் வீட்டில் ஐடி சோதனை நடந்திருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. ஆந்திராவில் மக்களவை மற்றும் சட்டப்பேரவை தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு இன்று ஒரே கட்டமாக நடைபெறுகிறது. இதற்கான தேர்தல் பிரசாரம் நேற்று முன்தினம் மாலையுடன் நிறைவடைந்தது. இந்நிலையில், குண்டூர் மக்களவை தொகுதி தெலுங்கு தேசம் கட்சி வேட்பாளர் கல்லாஜெயதேவ் வீடு மற்றும் அவரது ஆதரவாளர்கள் 2 பேரின் வீடுகளில் வருமான வரித்துறையினர் நேற்று முன்தினம் இரவு திடீர் சோதனை நடத்தினர்.
அப்போது அங்கிருந்த கல்லாஜெயதேவ்வின் கணக்காளர் குர்ரப்பநாயுடுவிடம் துருவித்துருவி விசாரணை நடத்தினர். இதையறிந்த கல்லாஜெயதேவ் மற்றும் அவரது ஆதரவாளர்கள் பட்டாபிபுரம், குண்டூர் ஆகிய இடங்களில் சாலைமறியலில் ஈடுபட்டனர். அதேபோல் தெலுங்குதேசம் கட்சியினர் நள்ளிரவு வரை கலெக்டர் அலுவலகம் முன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். நள்ளிரவு 12 மணியளவில் சோதனையை முடித்துக்கொண்டு அதிகாரிகள் புறப்பட்டு சென்றனர். சோதனை குறித்து எதுவும் தெரிவிக்காமல் அதிகாரிகள் சென்றுவிட்டனர். இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட அக்கட்சியினரும் கலைந்து சென்றனர்.
பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி