×

‘அம்மா எப்படி செத்தாங்க?’ வசனத்தால் ஆர்.கே.நகர் பட தயாரிப்பாளருக்கு மிரட்டல்?: பட வெளியீட்டை தள்ளி வைத்தார்

சென்னை: இயக்குனர் வெங்கட் பிரபு தனது நண்பர் பத்ரி கஸ்தூரியுடன் இணைந்து தயாரித்துள்ள படம் ஆர்.கே.நகர். இதில் வைபவ், சோனா அல்தாப், அஞ்சனா கீர்த்தி, சம்பத்ராம் உள்பட பலர் நடித்துள்ளனர். இதன் டீசர் சமீபத்தில் வெளியிடப்பட்டது. இதில் ‘நடிகர்னா ஓட்டு போட்டு விடுவார்களா, எம்.ஜி.ஆரா நீ’, ‘எலெக்‌ஷன் வந்தால்தான் மக்கள் ஞாபகம் வருமா’, ‘அம்மா எப்படி செத்தாங்க’ உள்ளிட்ட வசனங்கள் இருந்தது. இந்த படம் வரும் 12ம் தேதி வெளிவருவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால்,  தேர்தல் முடிந்த பிறகு வெளிவருவதாக தயாரிப்பாளர் வெங்கட் பிரபு அறிவித்திருக்கிறார். இதுதொடர்பாக வெளியிட்டுள்ள வீடியோவில் அவர் பேசியிருப்பதாவது: பட ரிலீசுக்கு தயாராக இருந்தோம். எதிர்பாராதவிதமாக படத்தை வெளியிட முடியவில்லை. சில பல காரணங்கள் அதற்கு இருக்கிறது.

நாங்கள் செய்யாத தவறுக்காக பல பிரச்னைகளை சந்திக்கிறோம். தேர்தலுக்கு பிறகுதான் வெளியிட முடியும் என்று கூறிவிட்டார்கள். நான் யார் பெயரையும் குறிப்பிட்டுச்  சொல்ல விரும்பவில்லை. இந்த படத்தில் கண்டிப்பாக அரசியல் இல்லை. யாரையும் குறிப்பிட்டு இந்தப் படத்தை எடுக்கவில்லை. இவ்வாறு பேசியிருக்கிறார். படத்தில் ஆளும் கட்சிக்கு எதிரான வசனங்கள், காட்சிகள் இருப்பதாலும் ஆர்.கே.நகர் தேர்தலில் நடந்த தில்லுமுல்லுகள் காட்சிகளாக இடம்பெற்றிருப்பதாலும் ஆளும்கட்சியினர் நெருக்கடி காரணமாக படம் ரிலீஸ் தள்ளிவைக்கப்பட்டுள்ளதாக சினிமா வட்டாரத்தில் பேசப்படுகிறது.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : filmmaker ,RK Nagar ,release , RK Nagar, film producer
× RELATED ஆர்.கே.நகர் தொகுதியில் ஒரு சில...