×

தேர்தலுக்கு பிறகு பாஜ பூஜ்ஜியம்தான்: ப.சிதம்பரம் பேச்சு

சென்னை: தேர்தலுக்கு பிறகு பாஜ பூஜ்ஜியம்தான் என முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் பேசினார். வடசென்னை நாடாளுமன்ற தொகுதி திமுக வேட்பாளர் கலாநிதி வீராசாமியை ஆதரித்து, சென்னை கிழக்கு மாவட்டம் திருவிக நகர் பகுதி சார்பில் ஓட்டேரியில் நேற்று முன்தினம் பொதுக்கூட்டம் நடந்தது. சென்னை கிழக்கு மாவட்ட செயலாளர் சேகர்பாபு எம்எல்ஏ தலைமை வகித்தார். சிறப்பு அழைப்பாளராக முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் கலந்துகொண்டு பேசியதாவது: தமிழ்மொழி மிகவும் பழமை வாய்ந்தது என ஆராய்ச்சி மூலம் தெரியவந்துள்ளது. அப்படிப்பட்ட மொழியை மத்திய அரசு ஒதுக்குகிறது. இந்திமொழி கலாச்சாரத்தை யார் புகுத்தினாலும் ெதன்னிந்தியா ஒன்றுகூடி எதிர்க்கும். காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தவுடன் 9 மாதங்களில் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கப்படும்.

இந்த தேர்தலுக்கு பிறகு தமிழகம், கேரளா, ஆந்திராவில் பாஜ பூஜ்ஜியம்தான் எடுக்கும். டெல்லியில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு, ராகுல்காந்தி பிரதமரானவுடன் சில வாரங்களில் தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் முதல்வர் ஆவார். இபிஎஸ், ஓபிஎஸ், ஐபிஎஸ் என யார் தடுத்தாலும் நிச்சயம் நடக்கும். பாஜ ஆட்சிக்கு பல்லக்கு தூக்கிக் கொண்டு கட்சியை யார் கைப்பற்றுவது என்ற எண்ணத்தில்தான் இபிஎஸ், ஓபிஎஸ், டிடிவி செயல்படுகின்றனர். மக்களுக்கு நல்லது செய்யும் எண்ணம் இல்லை. 40 தொகுதிகளிலும் திமுக, காங்கிரஸ் கூட்டணி வெற்றிபெறும். வடசென்னையில் போட்டியிடும் கலாநிதி வீராசாமிக்கு உதயசூரியன் சின்னத்தில் வாக்களித்து வெற்றிபெற செய்யுங்கள். இவ்வாறு சிதம்பரம் பேசினார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Bhajji ,election ,speech ,P. Chidambaram , election, BJP, Chidambaram,
× RELATED மதம், சாதி அடிப்படையில் பிரிவினையை...