திருவனந்தபுரம்: கன்னியாஸ்திரி பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கில் பிஷப் பிராங்கோவுக்கு எதிராக 2 ஆயிரம் பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகை பாலா நீதிமன்றத்தில் தாக்கல் ெசய்யப்பட்டது. பஞ்சாப் மாநிலம், ஜலந்தரில் பிஷப்பாக இருந்தவர் பிராங்கோ. இந்த சபையின் கட்டுப்பாட்டில் உள்ள கோட்டயம், குரவிலங்காடு கன்னியாஸ்திரி மடத்தை சேர்ந்த ஒரு கன்னியாஸ்திரியை பிஷப் பிராங்கோ மிரட்டி பலாத்காரம் செய்ததாக புகார் கூறப்பட்டது. இது நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இது தொடர்பாக பாதிக்கப்பட்ட கன்னியாஸ்திரி கடந்த வருடம் ஜூன் 26ம் தேதி கோட்டயம் எஸ்பி ஹரிசங்கரிடம் புகார் செய்தார். இந்த சம்பவம் தொடர்பாக விசாரிக்க வைக்கம் டிஎஸ்பி சுபாஷ் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. இந்த தனிப்படையினர் நடத்திய விசாரணையை தொடர்ந்து அக்டோபர் 24ம் தேதி பிஷப் பிராங்கோ கைது செய்யப்பட்டார். 24 நாள் சிறைவாசத்திற்கு பின் அவர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.
இந்த நிலையில் பிஷப் பிராங்கோ கைது செய்யப்பட்டு 5 மாதங்கள் ஆன பிறகும் போலீசார் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யவில்லை. இதையடுத்து போலீசை கண்டித்து குரவிலங்காடு மடத்தை சேர்ந்த கன்னியாஸ்திரிகள் போராட்டம் நடத்தினர். இதனால் பிஷப் பிராங்கோ மீது நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய போலீசார் தீர்மானித்தனர். அதன்படி 2 ஆயிரம் பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகையை போலீசார் தயார் செய்து பாலா முதல்வகுப்பு மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் நேற்று தாக்கல் செய்தனர். இதில் பிஷப் பிராங்கோவுக்கு எதிராக பலாத்காரம், இயற்கைக்கு மாறான உறவு, சிறைவைத்து மிரட்டல் உள்பட 5 பிரிவுகளில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இந்த குற்றங்கள் நிரூபிக்கப்பட்டால் பிஷப்புக்கு ஆயுள் தண்டனை வரை கிடைக்கலாம்.
பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி