டெல்லி : 54வது சிஆர்பிஎப் வீரர்களின் வீரவணக்க தினத்தையொட்டி காஷ்மீரில் புல்வாமா தாக்குதலில் உயிரிழந்த 40 வீரர்களுக்கான விருதினை குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் வழங்கினார். டெல்லியில் சாணக்கியபுரியில் உள்ள தேசிய காவலர் நினைவகத்தில் இன்று சிஆர்பிஎப் வீரவணக்க தினம் அனுசரிக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் முதல்முறையாக குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், கலந்து கொண்டு பணியின் போது உயிரிழந்த வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தினார்.
முன்னதாக காஷ்மீர் மாநிலம் அவந்திப்போரா பகுதியில் கடந்த பிப்ரவரி மாதம் 14ம் தேதி ஜெய்ஷ்-இ- முகமது தீவிரவாத அமைப்பு நடத்திய தற்கொலைப் படை தாக்குதலில் 40 சிஆர்பிஎப் வீரர்கள் உயிரிழந்தனர். இந்நிலையில் வீரவணக்க தினத்தையொட்டி உயிரிழந்த 40 வீரர்களுக்கான விருதினை குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் வழங்கினார்.
பதக்கங்கள் மற்றும் சான்றிதழ்களை உயிரிழந்த வீரர்களின் குடும்பத்தினர் பெற்றனர். தொடர்ந்து, ‘சிஆர்பிஎப் வீர் பரிவார்’ என்ற செல்போன் செயலியை குடியரசுத் தலைவர் அறிமுகம் செய்து வைத்தார்.இந்த செயலி உயிர் தியாகம் செய்த வீரர்களின் குடும்பத்தினருக்கு பயனுள்ளதாக இருக்கும் என்றும், நிதி உதவிகளை அறிந்துகொள்ள உதவுவதோடு, பிற உதவிகளையும் பெற பயனுள்ளதாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டது.
பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி