அறந்தாங்கி: புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி நகரில் பட்டுக்கோட்டை சாலையில் பெரியாரின் முழு உருவ சிமெண்ட் சிலை உள்ளது. மக்களவை தேர்தல் நடத்த விதிமுறைகள் அமலுக்கு வந்ததால், அறந்தாங்கி நகரில் உள்ள பெரியார் சிலை உள்ளிட்ட அனைத்து சிலைகளும் வருவாய்த்துறையினரால் துணியால் மூடப்பட்டது. இந்த நிலையில் சமீபத்தில் தமிழக தலைமை தேர்தல் ஆணையர் சத்தியபிரதா சாகு, மறைந்த பழைய தலைவர்களான பெரியார், காமராஜர், அண்ணா போன்ற தலைவர்களின் சிலைகளை மூட வேண்டியதில்லை என அறிவித்தார். இதை தொடர்ந்து அறந்தாங்கியில் உள்ள பெரியார் சிலையில் சுற்றியிருந்த துணி கடந்த சில நாட்களுக்கு முன்பு அகற்றப்பட்டது. இந்த நிலையில் நேற்று அதிகாலை, அறந்தாங்கியில் உள்ள பெரியார் சிலையின் தலைப்பகுதி மட்டும் மர்ம நபர்களால் உடைக்கப்பட்டு, சேதப்படுத்தப்பட்டது. தகவல் அறிந்த அறந்தாங்கி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, சிலையின் சேதமான பகுதியை கைப்பற்றினர். மேலும் திமுக, திக உள்ளிட்ட கட்சியினர் சம்பவ இடத்தில் கூடினர்.
இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்த புதுக்கோட்டை எஸ்.பி செல்வராஜ், ஏ.டி.எஸ்.பி.இளங்கோ, அறந்தாங்கி டி.எஸ்.பி கோகிலா உள்ளிட்ட அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர். பெரியார் சிலையை உடைத்தவர்களை கைது செய்யும் வரை அமைதியான முறையில் சிலையின் அருகே காத்திருப்பு போராட்டம் நடத்தப் போவதாக திகவினர் தெரிவித்தனர். அவர்களிடம் அறந்தாங்கி டி.எஸ்.பி கோகிலா பேச்சுவார்த்தை நடத்தினார். இதைத் தொடர்ந்து திக, திமுக உள்ளிட்ட கூட்டணி கட்சியினர் போராட்டத்தை கைவிட்டு கலைந்துசென்றனர். அறந்தாங்கியில் மர்மநபர்கள் பெரியார் சிலையை உடைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி