×

ஐசிசி உலக கோப்பை தொடர் இந்திய அணி ஏப். 15ல் தேர்வு

மும்பை: ஐசிசி உலக கோப்பை ஒருநாள் போட்டித் தொடருக்கான இந்திய அணி வீரர்கள் தேர்வு ஏப்ரல் 15ம் தேதி நடைபெறும் என கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது. கிரிக்கெட் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்க்கும் உலக கோப்பை தொடர், இங்கிலாந்து மற்றும் வேல்ஸில் வரும் மே 30ம் தேதி தொடங்கி ஜூலை 14ம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்த தொடரில் பங்கேற்கும் நாடுகளை  சேர்ந்த கிரிக்கெட் வாரியங்கள், தங்கள் அணிகளை தேர்வு செய்வதில் மும்முரமாக ஈடுபட்டுள்ளன. இதற்கான கெடு ஏப்ரம் 23ம் தேதியுடன் முடிவடையும் நிலையில், இந்திய அணி வரும் 15ம் தேதி தேர்வு செய்யப்பட உள்ளதாக  பிசிசிஐ அறிவித்துள்ளது.

எம்.எஸ்.கே.பிரசாத் தலைமையிலான தேர்வுக் குழுவினர் மும்பையில் கூடி வீரர்களைத் தேர்வு செய்கின்றனர். இந்த கூட்டத்தில் கேப்டன் விராத் கோஹ்லியும் பங்கேற்கிறார். பேட்டிங் வரிசையில் 4வது வீரராகக் களமிறங்குவது  யார் என்பதில் தான் கடும் போட்டி நிலவுகிறது. விக்கெட் கீப்பர்/பேட்ஸ்மேன் ரிஷப் பன்ட், அம்பாதி ராயுடு, லோகேஷ் ராகுல், தினேஷ் கார்த்திக் ஆகியோர் தங்களுக்கு வாய்ப்பு கிடைக்கும் என எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.அதே போல, ஆல் ரவுண்டர்கள் வரிசையில் ஹர்திக் பாண்டியா தனது இடத்தை உறுதி செய்துள்ள நிலையில், ரவீந்திர ஜடேஜா மற்றும் விஜய் ஷங்கர் இடையே போட்டி ஏற்பட்டுள்ளது. இந்திய அணி தனது முதல் லீக்  ஆட்டத்தில் ஜூன் 5ம் தேதி தென் ஆப்ரிக்காவை எதிர்கொள்கிறது.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : ICC World Cup ,Indian , ICC World Cup , Indian team,
× RELATED சில்லி பாயின்ட்…