×

கல்லட்டி மலைப்பாதையில் தடுப்புச்சுவர் கட்டும் பணி தீவிரம்

ஊட்டி: ஊட்டி கல்லட்டி மலைப்பாதையில், 34வது வளைவில் சாலையை அகலப்படுத்த ரூ.45 லட்சம் மதிப்பில் கான்கீரிட் தடுப்புசுவர் கட்டும் பணி நடக்கிறது.  நீலகிரி மாவட்டத்தில் உள்ள சாலைகளிலேயே கல்லட்டி மலைப்பாதை மிகவும் செங்குத்தாகவும், அதிக வளைவுகளை கொண்டதாகவும் காணப்படுகிறது. இச்சாலையில் 12 கி.மீ., தூரம் வரை அபாயகரமான மற்றும் மிகவும் குறுகிய 36 கொண்டை ஊசி வளைவுகள் உள்ளன. செங்குத்தாக உள்ள இச்சாலையில் விபத்துகளை குறைக்க ஒவ்வொரு வளைவுகளிலும் அபாயகரமான இடங்களில் இரும்பு தடுப்புகள், வேகத்தடைகள், எதிரே வரும் வாகனம் தெரியும் வண்ணம் கான்வெக்ஸ் கண்ணாடிகள் போன்றவைகள் அமைக்கப்பட்டுள்ளது.

இருப்பினும் விபத்துகள் குறைந்தபாடில்லை. இது தவிர இச்சாலையில் சரிவாக கீழ் நோக்கி செல்லும் போது கண்டிப்பாக இரண்டாவது கியரில்  செல்ல வேண்டும் என அறிவுறுத்தப்பட்டு எச்சரிக்கை பலகைகளும் வைக்கப்பட்டுள்ளது. ஆனால், அதனை பொருட்படுத்தாமல் சிலர் செல்வாதால் விபத்துகள் ஏற்படுவதாக கூறப்படுகிறது. இதற்கிடையே, கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் கல்லட்டி மலைப்பாதையில் 34வது வளைவில் பள்ளத்தில் கார் கவிழ்ந்து ஏற்பட்ட விபத்தில் 5 பேர் சம்பவ இடத்திலேயே பலியானார்கள். 2 நாட்களுக்கு பிறகு 2 பேர் உயிருடன் மீட்கப்பட்டனர். இச்சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.  

இந்த விபத்தை தொடர்ந்து கல்லட்டி மலைப்பாதையில் விபத்துகளை குறைக்க பல்வேறு பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்கப்படுகிறது. இதன்படி மலைப்பகுதி துவங்குமிடம், சோலாடா சந்திப்பு, கல்லட்டி உள்ளிட்ட இடங்களில் இன்டர் லாக் கற்கள் கொண்டு வேகதடை அமைக்கப்பட்டுள்ளது. அதேபோல் 34 வளைவில் விபத்துக்களை குறைக்க நெடுஞ்சாலைத்துறை மூலம் சாலையை அகலப்படுத்த ரூ.45 லட்சம் மதிப்பில் தடுப்புசுவர் கட்டும் பணி தற்போது தீவிரமாக நடக்கிறது. பல இடங்களிலும் சாலைகள் அகலப்படுத்தப்பட்டு கான்கீரிட் தளங்கள் அமைக்கப்படுகிறது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Kallatti , Kallatti, mountain trail, barrier
× RELATED கல்லட்டி மலை பாதையில்...