சென்னை: எங்கள் மீது வீண்பழி சுமத்த மத்திய, மாநில அரசுகள் முயற்சிப்பதாக துரைமுருகன் குற்றம்சாட்டியுள்ளார். இதுகுறித்து, திமுக பொருளாளர் துரைமுருகன் நேற்று வெளியிட்ட அறிக்கை: தேர்தலில் வெற்றி, தோல்வி சகஜம். எதிரும், புதிருமாக நிற்பவர்கள் கருத்துபோர் புரிவதுண்டு. அது தான் அரசியல். எதிர்த்து நிற்பவரை தனிப்பட்ட முறையில் பழிவாங்க நினைப்பதும், வீண்பழி சுமத்தி அவமானத்திற்கு உள்ளாக்க முயற்சிப்பதும் இன்றைய அரசியலில் ஆளும்கட்சி தரப்பில் மேலோங்கி நிற்கிறது. இதற்கோர் எடுத்துக்காட்டு தான் வேட்பாளர் கதிர்ஆனந்தின் வீடு, கல்லூரியை வருமானவரி துறையினர் சோதனை நடத்திய செயல்.
இத்தோடு நிற்கவில்லை மத்திய, மாநில அரசுகளின் நடவடிக்கைகள். எங்களை சுற்றி ஒரு கண்காணிப்பு வளையத்தையே உருவாக்கி கண்காணித்து வருகிறார்கள். இதுவும் போதாது என்று மேலும் சில செயல்களில் மத்திய, மாநில அரசுகள் ஈடுபடபோவதாக எங்களுக்கு செய்திகள் வந்துகொண்டிருக்கிறது. எங்கள் வீடு, கல்லூரி சோதனைகளில் சட்டத்திற்கு புறம்பான பொருள்கள் எதுவும் கைப்பற்ற முடியவில்லை. இதனால் எங்களை எப்படியும் பழிவாங்கி தீர்வது என்ற முடிவோடு தேர்தல் நெருக்கத்தில் எங்களுக்கு சொந்தமான இடங்களில் அவர்களாகவே ஏதாவது பொருள்களை வைத்துவிட்டு இவர்கள் புதியதாக கண்டுபிடித்துவிட்டதாக அவைகளைக்காட்டி எங்கள் மீது வீண்பழி சுமத்த ஒரு முயற்சி நடப்பதாக அறிகிறோம். இதன்மூலம் கதிர்ஆனந்தின் வெற்றியை சீர் குலைத்து விடலாம் என்று இந்த அரசுகள் பெருமுயற்சி எடுப்பதாக தகவல். இத்தகைய போக்கு ஜனநாயகத்திற்கு புறம்பானது மட்டுமல்ல, கடைந்து எடுத்த பாசிச முறையாகும். இவ்வாறு கூறியுள்ளார்.
பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி