அரக்கோணம் மக்களவை தொகுதியில் அதிமுக கூட்டணி சார்பில் பாமகவின் ஏ.கே.மூர்த்தி போட்டியிடுகிறார். இவரை ஆதரித்து நேற்று இரவு அரக்கோணம் மக்களவை தொகுதிக்கு உட்பட்ட வேலூர் சேண்பாக்கத்தில் பாமக நிறுவனர் ராமதாஸ் தேர்தல் பிரசாரம் மேற்கொண்டார். அப்போது, பேசிய அவர் இதற்கு முன்பு அரக்கோணம் மக்களவை தொகுதியில் பாமக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றவரை பற்றியும், தனது மகன் அன்புமணி அமைச்சராக இருந்தபோது கொண்டுவந்த திட்டங்களை பற்றியும் மட்டுமே பேசினார். வாக்குறுதிகள் எதையுமே வாசிக்கவில்லை. இதனால் கூட்டணி கட்சியினர் கடும் அதிருப்தி அடைந்தனர்.
தொடர்ந்து பேசிய ராமதாஸ் மாம்பழம் சின்னத்துக்கு வாக்களியுங்கள் என்று பேச்சை முடித்தார். அப்போது, கூட்டணி கட்சிகளை ஒதுக்கிவிட்டீர்களே? என்று ேமடையில் லேசான சலசலப்பு ஏற்பட்டது. சுதாரித்து கொண்ட ராமதாஸ், ‘இரட்டை இலைகளுடன் கூடிய மாம்பழம் சின்னத்துக்கு வாக்களியுங்கள், நடுவில் மாம்பழம் இருக்கும். இந்த பக்கம் ஒரு இலை, அந்த பக்கம் ஒரு இலை இருக்கும். அந்த சின்னத்தில் வாக்களிக்க வேண்டும்’ என்று சமாளிக்க தொடங்கினார். கடைசியில் இரட்டை இலையுடன் கூடிய சின்னத்தை வாக்காளர்கள் தேடும் நிலை வந்துவிட்டதே என்று கூட்டணி நிர்வாகிகள் புலம்ப தொடங்கிவிட்டனர்.
பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி