×

பாளையில் இன்று பரபரப்பு: இறுதி ஊர்வலத்தில் இருதரப்பினர் மோதல்... வீடு கல்வீசி உடைப்பு; 2 பெண் உள்பட 5 பேர் காயம்

நெல்லை: நெல்லையில் இறந்தவர் உடலை ஊர்வலமாக கொண்டு செல்வதில் இருதரப்பினர் இடையே மோதல் ஏற்பட்டது. கல்வீச்சில் வீடு சேதமானது. இரு பெண்கள் உள்பட 5 பேர் காயம் அடைந்தனர். மோதல் தொடர்பாக  இருதரப்பை சேர்ந்த 2 பேரை போலீசார் விசாரணைக்கு அழைத்து சென்றதால் அங்கு தள்ளுமுள்ளு ஏற்பட்டது. பாளை அருகே டக்கரம்மாள்புரம் முதல் தெருவை சேர்ந்தவர்  துரைராஜ்(52). மீன் வியாபாரியான இவர்  நேற்று இறந்தார். இதையடுத்து  இறுதி சடங்கிற்காக  அவரது உடலை உறவினர்கள் இன்று காலை அப்பகுதியில் உள்ள கல்லறை தோட்டத்திற்கு ஊர்வலமாக எடுத்து சென்றனர்.  அங்குள்ள வடக்கு தெரு வழியாக ஊர்வலம் சென்றபோது அப்பகுதியை சேர்ந்த மற்றொரு தரப்பினர்,   தங்கள் பகுதி வழியாக கொண்டு செல்ல எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் இருதரப்பினர் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு மோதல் ஏற்பட்டது. அப்போது இருதரப்பை சேர்ந்தவர்களும்  கல்வீசி தாக்குதலில்  ஈடுபட்டனர். அதில் அங்குள்ள ஒரு வீட்டின் மேற்கூரை நொறுங்கியது.

மேலும் அந்த வீட்டில் பீடி சுற்றும் பணியில் ஈடுபட்டிருந்த 2 பெண்கள் உள்ளிட்ட 5 பேர் படுகாயம் அடைந்தனர். உடனடியாக அவர்கள், ஆம்புலன்ஸ் மூலம் நெல்லை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். தகவல் அறிந்து நெல்லை மாநகர உதவி கமிஷனர் கோடிலிங்கம் தலைமையில் போலீசார் மற்றும் அதிரடிப்படையினர் சம்பவ இடம் சென்று விசாரணை நடத்தினர். அப்போது மோதல் தொடர்பாக இருதரப்பை சேர்ந்த இரண்டு பேரை விசாரணைக்காக அழைத்து சென்றனர். இதற்கு இருதரப்பை சேர்ந்தவர்களும் எதிர்ப்பு தெரிவித்து போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.  இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. ஆனாலும் 2 பேரையும் போலீசார் விசாரணைக்காக பெருமாள்புரம் காவல் நிலையத்திற்கு அழைத்து சென்றனர். தொடர்ந்து அங்கு பதற்றம் ஏற்பட்டுள்ளதால் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Fans ,funeral procession ,rally ,women , Milk, funeral procession, calyx break
× RELATED மாவட்ட நீதிமன்றம் சார்பில் சமரசம் குறித்த விழிப்புணர்வு பேரணி