×

ஸ்ரீபெரும்புதூர் தொகுதியில் பிரசாரம் ஒரு கோடி இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு ஏற்படுத்துவேன் : திமுக வேட்பாளர் டி.ஆர்.பாலு உறுதி

சென்னை: ஸ்ரீபெரும்புதூர் நாடாளுமன்ற தொகுதி திமுக வேட்பாளர் டி.ஆர்.பாலு நேற்று தாம்பரம் பகுதியில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். காஞ்சி வடக்கு மாவட்ட செயலாளர் தா.மோ.அன்பரசன் எம்எல்ஏ, தாம்பரம் எம்எல்ஏ எஸ்.ஆர்.ராஜா உட்பட கூட்டணி கட்சினர் உடன் சென்று பிரசாரத்தில் ஈடுபட்டனர். அப்போது, டி.ஆர்.பாலு பேசியதாவது: என்னை வெற்றி பெற செய்தால் மீனம்பாக்கம் வரை உள்ள மெட்ரோ ரயிலை வண்டலூர் வரை நீட்டிப்பேன். கத்திப்பாரா, போரூர், பூந்தமல்லி மற்றும் திருமங்கலம், முகப்பேர், அம்பத்தூர் ஆகிய மூன்று வழித்தடங்களில் மெட்ரோ ரயில் திட்டத்தை செயல்படுத்துவேன்.

நான், கடந்த முறை நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தபோது தாம்பரம் ரயில் நிலையத்தை 3வது முனையமாக அறிவித்தேன். அதுபோல், அம்பத்தூர் பகுதியில் 4வது ரயில் முனையம் கொண்டு வருவேன். அம்பத்தூரில் இருந்து ஆவடி, ஸ்ரீபெரும்புதூர், கூடுவாஞ்சேரி வழியாக கன்னியாகுமாரி வரை ரயில் வழித்தடம் அமைப்பேன். கன்னியாகுமரியில் இருந்து ஸ்ரீபெரும்புதூர் வழியாக டெல்லி வரை ரயில் சேவைக்கு ஏற்பாடு செய்வேன். ஸ்ரீபெரும்புதூர், ஒரகடம், தாம்பரம் ஆகிய மூன்று பகுதிகளில் இருந்து வரும் வாகனங்களால் பெரும்புதூர் சந்திப்பில் கடும் நெரிசல் ஏற்படுகிறது. எனவே, கத்திப்பாரா மாதிரி இங்கு ஒரு மேம்பாலம் அமைப்பேன். இவ்வாறு அவர் பேசினார். தொடர்ந்து, செம்பாக்கம் பகுதியில் அவர் பொதுமக்களை சந்தித்து வாக்கு சேகரித்தார். அப்போது அவர் பேசியதாவது: 50 லட்சம் பெண்களுக்கு மக்கள் நல பணியாளர்கள் வேலை வாய்ப்பு வழங்கப்படும். அவர்களுக்கு 50 ஆயிரம் கடனாக கொடுக்கப்படும், அதற்கு வட்டி கிடையாது. படித்து வேலை இல்லாமல் இருக்கும் ஒரு கோடி இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு ஏற்பாடு செய்வேன். இவ்வாறு அவர் பேசினார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : DM Balu ,DMK ,constituency ,Sriperumbudur ,youngsters , Sriperumbudur constituency,DMK candidate TR Baalu confirmed
× RELATED தேர்தல் வாக்குப்பதிவு நிலவரம்...