×

மாலத்தீவு நாடாளுமன்ற தேர்தல் முன்னாள் அதிபருக்கு மீண்டும் வெற்றி வாய்ப்பு

மாலே,: மாலத்தீவில் நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் முன்னாள் அதிபர் முகமது நஷீத் பெரும்பான்மை வாக்குகளுடன் வெற்றி பெறுவார் என தெரிகிறது. இந்தியப் பெருங்கடலில் அமைந்துள்ள மாலத்தீவில், அதிபர் இப்ராகிம் முகமது சோலி தலைமையிலான மாலத்தீவு ஜனநாயக கட்சி ஆட்சி நடைபெறுகிறது. கடந்த 2013ல் நடைபெற்ற அதிபர் தேர்தலில் மாலத்தீவு முற்போக்கு கட்சியை சேர்ந்த அப்துல்லா யாமீன்  முறைகேடாக வெற்றி பெற்று அதிபரானார். இதையடுத்து, மாலத்தீவு முன்னாள் அதிபர் முகமது நஷீத், உடல் நிலையை காரணம் காட்டி பிரிட்டனில் அடைக்கலமானார். இதனிடையே, 2வது முறை ஆட்சியை பிடிக்கும் நோக்குடன் யாமீன் முன் கூட்டியே அதிபர் தேர்தலை நடத்த திட்டமிட்டார். இவரை எதிர்த்து இப்ராகிம் முகமது சோலி, எதிர்க்கட்சிகள் கூட்டணி சார்பில் களமிறக்கப்பட்டார். இதில், 58 சதவீத வாக்குகளுடன் வெற்றி பெற்று நாட்டின் 7வது அதிபராக சோலி பதவியேற்றார். இதையடுத்து, வெளிநாட்டில் தஞ்சம் அடைந்திருந்த முகமது நஷீத் நாடு திரும்பினார்.

இந்நிலையில், 87 உறுப்பினர்களைக் கொண்ட நாடாளுமன்றத்துக்கு கடந்த சனிக்கிழமை தேர்தல் நடைபெற்றது. இதில், தற்போதைய  ஆளும் கட்சி சார்பில் போட்டியிட்ட முன்னாள் அதிபர் முகமது நஷீத் மீண்டும் வெற்றி பெற  பிரகாசமான வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது. இது குறித்து அதிபர் சோலி கூறுகையில், ``எங்கள் கொள்கைகளை நன்றாக புரிந்து கொண்டு ஆதரவளிக்கும் உறுப்பினர்களை கொண்டே அடுத்த அரசு அமைக்கப்படும்’’ என்றார்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Maldives ,president ,election , end to election campaigning , Maldives
× RELATED மேலும் பல இந்திய வீரர்கள்...