×

களக்காடு அருகே காதலித்து திருமணம் செய்த கணவரை கொன்றது ஏன்? கைதான மனைவி பகீர் வாக்குமூலம்

களக்காடு: பலமுறை எச்சரித்தும் கள்ளத்தொடர்பை கைவிட மறுத்ததால் காதல் கணவரை கொலை செய்ததாக கைதான மனைவி போலீசில் வாக்குமூலம் அளித்துள்ளார். நெல்லை மாவட்டம் களக்காடு அருகே உள்ள ஜெ.ஜெ.நகர் மேல காலனியைச் சேர்ந்தவர் கட்டிட தொழிலாளி் ஜான்சன் (50). இவரது 2வது மனைவி பேரின்பம் (45). இந்த தம்பதியினருக்கு 4 மகள்கள் உள்ளனர். இதனிடையே ஜான்சனுக்கும், அதே பகுதியைச் சேர்ந்த மற்றொரு பெண்ணுக்கும் கள்ளத்தொடர்பு ஏற்பட்டுள்ளது. இதையறிந்த பேரின்பம், கள்ளத்தொடர்பை கைவிடும்படி கணவரிடம் வலியுறுத்தி உள்ளார். எனினும் அவர் தொடர்பை கைவிடவில்லை. இதனால் அவர்களுக்குள் அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. கடந்த 3ம் தேதி இரவும் அவர்களுக்குள் மீண்டும் தகராறு ஏற்பட்டது. பின்னர் இருவரும் தூங்கச் சென்றனர். ஜான்சன் வீட்டின் முன் அறையில் தூங்கிக் கொண்டிருந்தார். அதிகாலை 5 மணிக்கு எழுந்த பேரின்பம், திடீரென மண்வெட்டியால் ஜான்சனின் முகத்தில் சரமாரியாக வெட்டினார்.

இதில் படுகாயம் அடைந்து ரத்த வெள்ளத்தில் மிதந்த அவரை உறவினர்கள் மீட்டு, நெல்லை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு நேற்று முன்தினம் மாலை 4 மணியளவில் ஜான்சன் இறந்தார். இதுகுறித்து களக்காடு போலீசில் புகார் செய்யப்பட்டது. எஸ்ஐ லிபிபால்ராஜ் மற்றும் போலீசார் வழக்கு பதிந்து பேரின்பத்தை கைது செய்தனர். அவர் அளித்துள்ள வாக்குமூலத்தில் கூறியதாக போலீசார் தெரிவித்ததாவது: நானும், ஜான்சனும் காதலித்து திருமணம் செய்து கொண்டோம். எங்களுக்கு 4 மகள்கள் உள்ளனர். இதில் இருவருக்கு திருமணம் முடிந்து விட்டது. 3வது மகளுக்கு திருமண ஏற்பாடுகள் செய்து வருகிறேன். இந்நிலையில் எனது கணவருக்கும், இன்னொரு பெண்ணுக்கும் தொடர்பு ஏற்பட்டதாக அறிந்தேன். இதனை நான் கண்டித்தேன். கோபம் அடைந்த எனது கணவர் என்னை கைவிட்டு, அவளுடனே குடும்பம் நடத்தப் போகிறேன் என்று கூறினார். மேலும் எனது மகளின் திருமணத்திற்கும் பணம் தர மாட்டேன் என்றும் கூறினார். இது எனக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியது. சம்பவத்தன்று அதிகாலை பால் வாங்க பணம் கேட்டேன். அதற்கு அவர் பணம் தர மறுத்தார். எனவே ஆத்திரத்தில் மண்வெட்டியால் முகத்தில் சரமாரியாக வெட்டினேன். இதில் அவர் இறந்து போனார். இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Kalakkadu ,prisoner wife , Nellai, blackmail, wife, arrested, husband, murder
× RELATED மணிமுத்தாறு அருவியில் பராமரிப்பு...