சென்னை: திருவல்லிக்கேணி கிழக்கு குளக்கரை தெருவை சேர்ந்தவர் ஷியாம் குமார் (35), தனியார் நிறுவன ஊழியர். இவரது மனைவி உலக வங்கியில் வேலை செய்து வருகிறார். கடந்த 31ம் தேதி வீட்டில் உள்ள நகைகளை ஷியாம் குமார் சரிபார்த்துவிட்டு மீண்டும் பீரோவில் வைத்துள்ளார். இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு வெளியில் செல்வதற்காக, தனது மகனின் செயினை எடுக்க பீரோவை திறந்தபோது, 16 சவரன் மதிப்புள்ள ெசயின், மோதிரம், வளையல் மாயமாகி இருந்தது. வீட்டின் பூட்டு மற்றும் பீரோ உடைக்கப்படாமல் நகைகள் மட்டும் மாயமாகி இருந்தது.
இதுகுறித்து ஷியாம் குமார் ஐஸ்அவுஸ் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மற்றொரு சம்பவம்: மாங்காடு அடுத்த நெல்லிமாநகர் பகுதியை சேர்ந்தவர் ராமச்சந்திரன் (45). தனியார் நிறுவன ஊழியர். இவர், நேற்று முன்தினம் காலை வழக்கம் போல் வீட்டை பூட்டிவிட்டு வேலைக்கு சென்றார். பணி முடிந்து, மாலையில் வீடு திரும்பிபோது, கதவின் பூட்டு உடைக்கப்பட்டு திறந்து கிடந்தது. உள்ளே சென்று பார்த்தபோது, பீரோவில் வைத்திருந்த 15 சவரன் நகைகளை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றது தெரியவந்தது.
* மாங்காடு அடுத்த நெல்லிதோப்பு பகுதியை சேர்ந்தவர் லட்சுமி (30). நேற்று முன்தினம் இரவு வீட்டை பூட்டி விட்டு, அருகில் உள்ள தனது உறவினர் வீட்டுக்குச் சென்று தங்கினார். நேற்று காலை வீடு திரும்பியபோது, முன்பக்க கதவின் பூட்டு உடைக்கப்பட்டு திறந்து கிடந்தது. உள்ளே சென்று பார்த்தபோது, பீரோவில் இருந்த 10 சவரன் நகைகள் திருடு போனது தெரிந்தது. இதுகுறித்து மாங்காடு போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் விரைந்து வந்து, 2 வீடுகளிலும் பதிவான கைரேகைகள் மற்றும் அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்தனர். மேலும், புகார்களின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி