ஆந்திர அரசியலில் தேர்தல் நெருங்க நெருங்க பிரசாரம் அனல் பறக்கிறது. தெலுங்கு தேசம் கட்சியில் இருந்த பிரபல நடிகர் மோகன் பாபு, சமீபத்தில் ஜெகன் மோகன் ரெட்டியை சந்தித்து ஒய்எஸ்ஆர் காங்கிரசில் சேர்ந்தார். இதன் மூலம், சந்திரபாபு கணக்கில் மேலும் ஒரு எதிரி சேர்ந்து விட்டார். அவரும் தனது பங்குக்கு சந்திரபாபு நாயுடுவை சகட்டுமேனிக்கு போட்டுத் தாக்குகிறார்.ஏற்கனவே, சந்திரபாபு நாயுடுக்கு பிராடு, மோசடிக்காரன், ஏமாற்றுக்காரன் என்ற பட்டப் பெயர்கள் சூட்டப்பட்டு வருகின்றன. பிரதமர் மோடியும் அவரை ‘யு-டர்ன் பாபு’ என்று கிண்டலாக அழைக்கிறார். இவர்களுடன் மோகன்பாபுவும் சேர்ந்து கொண்டு, ‘யுஸ் அண்ட் துரோ பாபு’ என பெயரிட்டுள்ளார்.
மோகன் பாபு அளித்த ஒரு பேட்டியில், ‘‘கட்சி அதிகாரத்தை பிடிக்க மற்றவர்களை ஏணிப்படிகளாகப் பயன்படுத்துவதுதான் சந்திரபாபு நாயுடுவின் வழக்கம்.
அவரது அரசியல் பயணத்தில் மறைந்த என்.டி.ராமாராவ் மற்றும் பலரையும் ஏமாற்றியதுபோல் என்னையும் ஏமாற்றி விட்டார். சுருக்கமாக சொல்வது என்றால், அவருடைய கொள்கையே ‘யூஸ் அண்ட் துரோ’ கொள்கைதான். நாம் சமைக்கும்போது கறிவேப்பிலையை பயன்படுத்துவோம். ஆனால், சாப்பாடு தட்டில் போட்டவுடன் அதை தூக்கி வீசுவோம். அதுபோல் தான் சந்திரபாபுவின் செயலும் இருக்கும்” என்றார். அவர் மேலும் கூறுகையில், ‘‘ஹெரிடேஜ் புட்ஸ் நிறுவனத்தை துவக்கியபோது என்னை ஏமாற்றியபோல், விவசாயிகளின் பெயரில் பங்குகளை வாங்கி பின்னர் அவற்றை தனது பங்குகளாக மாற்றிக் கொண்டு அவர்களையும் ஏமாற்றினார். இதுபோல் அவரால் ஏமாற்றப்பட்டவர்கள் பட்டியல் நீள்கிறது. அவரது அரசியல் பயணத்தில், யூஸ் அண்ட் துரோ கொள்கையை பயன்படுத்திதான் முன்னேறியுள்ளார்’’ என்றார் கடுமையாக.
பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி