கடந்த வாரம் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, தர்மபுரி நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் பாமக வேட்பாளர் அன்புமணியை ஆதரித்து தேர்தல் பிரசாரம் செய்து விட்டு, கிருஷ்ணகிரி நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட போச்சம்பள்ளி, மத்தூர் வழியாக வேலூர் மாவட்டம் சென்றார். முன்னதாக முதல்வர் பிரசாரம் மேற்கொள்ள உள்ள பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.
அதிமுக மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் போச்சம்பள்ளி, மத்தூர் பகுதிகளில் திரண்டனர். ஆனால் இந்த தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் கே.பி.முனுசாமிக்கே தகவல் இல்லையாம். இதுகுறித்த தகவல் கிடைத்த கே.பி.முனுசாமி, உடனடியாக மின்னல் வேகத்தில் மத்தூருக்கு சென்றார். ஆனால், அதற்குள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி திருப்பத்தூருக்கு சென்றுவிட்டார். இதையறிந்த கே.பி. முனுசாமி, தொடர்ந்து சென்று திருப்பத்தூரில் முதல்வரின் காரை மறித்து நிறுத்தி சால்வை அணிவித்தார். கே.பி. முனுசாமி ஓபிஎஸ் அணியில் இருப்பதால்தான் முதல்வரின் பயணவிவரம் தெரிவிக்கப்படவில்லை என்றும் எடப்பாடியும் புறக்கணித்துவிட்டு சென்றார் என்றும் கட்சிக்காரர்கள் புலம்புகின்றனர்.
பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி