புதுடெல்லி: விவிஐபி ஹெலிகாப்டர் ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள கிறிஸ்டியன் மைக்கேல், விசாரணையின் போது தான் யாருடைய பெயரையும் குறிப்பிடவில்லை என்று கூறி டெல்லி உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். இத்தாலி நாட்டின் அகஸ்டா வெஸ்ட்லேண்ட் நிறுவனத்திடம் இருந்து 12 நவீன ஹெலிகாப்டர்கள் வாங்குவற்காக கடந்த 2010ம் ஆண்டு அப்போதைய காங்கிரஸ் அரசு ஒப்பந்தம் போடப்பட்டது. ஆனால், இதில் ஊழல் நடந்துள்ளதாகவும், இடைத்தரகர்கள் மூலம் இந்தியாவில் பல முக்கிய பிரமுகர்களுக்கு லஞ்சம் கைமாறியதாகவும் புகார் எழுந்தது.
இந்த வழக்கில் பிரிட்டனை சேர்ந்த இடைத்தரகர் கிறிஸ்டியன் மைக்கேல் முக்கிய குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ளார். இதற்கான குற்றப்பத்திரிக்கை ஏற்கனவே தாக்கல் செய்யப்பட்டு விட்டது. கிறிஸ்டியன் மைக்கேல் மீது அமலாக்கத்துறை சார்பில் நேற்று முன்தினம் துணை குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், மைக்கேல் சார்பில் டெல்லி உயர்நீதிமன்றத்தில் அவரது வழக்கறிஞர் மனு தாக்கல் செய்துள்ளார். இதில் ‘விசாரணையின்போது நான் யாருடைய பெயரையும் குறிப்பிடவில்லை. என்னிடம் குற்றப்பத்திரிக்கை வழங்குவதற்கு முன்பாகவே ஊடகங்களுக்கு அது எப்படி வழங்கப்பட்டது? அரசு அமைப்புகளை தனது அரசியல் பழிவாங்கும் நோக்கத்திற்காக மத்திய அரசு பயன்படுத்துகிறது’ என்று கூறப்பட்டுள்ளது. இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.
பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி