×

கள்ளக்காதல் விவகாரத்தில் அரிவாளால் வெட்டி மனைவி படுகொலை; தொழிலாளி போலீசில் சரண்

ஊத்தங்கரை: ஊத்தங்கரை அருகே கள்ளக்காதல் விவகாரத்தில் மனைவியை அரிவாளால் வெட்டிப் படுகொலை செய்த கணவன் போலீசில் சரணடைந்தார். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அடுத்த கேத்துநாய்க்கம்பட்டியை சேர்ந்தவர் ரவி (50). கூலி தொழிலாளி. இவருடைய மனைவி காமாட்சி (45). இவர்களுக்கு அய்யம்மாள் என்ற மகள் உள்ளார். அவர் திருமணமாகி கணவன் வீட்டில் வசிக்கிறார். இந்நிலையில் காமாட்சிக்கும் ஊத்தங்கரையை சேர்ந்த முருகன் என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டு நாளடைவில் கள்ளக்காதலாக மாறியது. கடந்த ஒரு வருடமாக இருவரும் கள்ளத்தொடர்பில் இருந்து வந்தனர்.

இதுபற்றி காமாட்சியின் கணவர் ரவிக்கு தெரியவந்தது. இதையடுத்து ரவி மனைவியை கண்டித்ததுடன் அடிக்கடி தகராறு செய்து வந்துள்ளார்.
இது சம்பந்தமாக காமாட்சியின் தாய் வீட்டார் பேசி சமாதானப்படுத்தி வைத்துள்ளனர். இந்நிலையில், நேற்றும் இருவருக்கும் தகராறு ஏற்பட்டது. இதனால் ஆத்திரத்தில் இருந்த ரவி இரவு 11 மணியளவில், மனைவி காமாட்சியை கொடுவாளால் சரமாரியாக வெட்டினார். இதில் ரத்த வெள்ளத்தில் சரிந்த காமாட்சி சம்பவ இடத்திலேயே இறந்தார்.

மனைவியை கொலை செய்த பின்னர், ரவி நடந்தே சிங்காரப்பேட்டை பஸ் ஸ்டாப்பிற்கு வந்தார். அங்கிருந்து மகள் அய்யம்மாளுக்கு போன் செய்து காமாட்சியை கொன்றுவிட்டதாக கூறினார். அதிர்ச்சியடைந்த அய்யம்மாள் இதுகுறித்து சிங்காரப்பேட்டை போலீசாருக்கு தகவல் அளித்தார். இதனிடையே ரவி, தனது மனைவியை வெட்டி கொன்றுவிட்டதாக கூறி சிங்காரப்பேட்டை போலீசில் சரண் அடைந்தார். இதுகுறித்து சிங்காரப்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து, ரவியை கைது செய்தனர். அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Wife, thief, cotton wedlock, saran in police
× RELATED போலீஸ் ஸ்டேஷனுக்கு வெடிகுண்டு மிரட்டல்: முதியவர் கைது