×

சத்தீஸ்கரில் மாவோயிஸ்டுகள் நடத்திய தாக்குதலில் எல்லை பாதுகாப்பு படை வீரர்கள் 4 பேர் வீரமரணம்

ராய்ப்பூர் : சத்தீஸ்கரில் மாவோயிஸ்டுகள் நடத்திய தாக்குதலில் எல்லை பாதுகாப்பு படை வீரர்கள் 4 பேர் வீரமரணம் அடைந்தனர். சத்தீஸ்கர் மாநிலம் கேன்கரில் மாவோயிஸ்டுகளுடனான துப்பாக்கி சண்டையில் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. சத்தீஸ்கர் மாநிலத்தில் வன்முறைச் செயல்களில் ஈடுபட்டு வரும் மாவோயிஸ்டுகளை ஒடுக்க எல்லைப் பாதுகாப்பு படையினர் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர். இதில் ஏராளமான மாவோயிஸ்டுகள் கொல்லப்பட்டுள்ளனர். எனினும் வனப்பகுதிகளில்  மாவோயிஸ்டுகள் ஆதிக்கம் இன்னமும் உள்ளது.

இந்நிலையில், கான்கர் மாவட்டம் மஹலா கிராமம் அருகில் உள்ள வனப்பகுதியில் துப்பாக்கி சண்டை நிகழ்ந்துள்ளது. 144-வது பட்டாலியனை சேர்ந்த எல்லை பாதுகாப்பு படை வீரர்கள் மாவோயிஸ்ட்கள் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு இருந்தனர். அங்கு பதுங்கி இருந்த மாவோயிஸ்ட்கள்  எல்லை பாதுகாப்பு படை வீரர்களை நோக்கி துப்பாக்கி சூடு நடத்தினர்.  இதனால் இரு தரப்பினருக்கும் இடையே கடுமையான துப்பாக்கிச்சூடு நடந்தது. இந்த துப்பாக்கிச் சண்டையில் முன்னதாக எல்லைப் பாதுகாப்பு படைவீரர் ஒருவர் உயிரிழந்ததாக தகவல் வெளியானது.

இந்நிலையில், தற்போது 4 பேர் வீரமரணமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் 2 வீரர்களுக்கு காயங்கள் ஏற்பட்டது. காயமடைந்த வீரர்கள் ஏர் ஆம்புலன்ஸ் மூலம் உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். சக வீரர்கள் உயிரிழந்தபோதிலும் ஏனைய வீரர்கள் மாவோயிஸ்ட்டுகளுடன் துப்பாக்கி சண்டையில் ஈடுபட்டு வருகின்றனர்.  அப்பகுதியில் உள்ள மாவோயிஸ்ட்டுகளை முடக்கும் வரை சண்டை தொடரும் என எல்லை பாதுகாப்புப் படையின் செய்தித் தொடர்பாளர் அறிவித்துள்ளார்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Maoists ,Chhattisgarh , Chhattisgarh, Maoists, Border Security Force, Soldiers, Soldiers, Attack, Conquer, Firing
× RELATED வயநாடு தொகுதி மக்களை...