கோபியில் நடந்த பிரசாரத்தின்போது, ஆண் குழந்தைக்கு ‘ஜெயலலிதா’ என பெண் பெயர் வைத்த அமைச்சர் செங்கோட்டையன் செயலால் தம்பதியினர் அதிர்ச்சியும் பொதுமக்கள் வேதனையும் அடைந்தனர். ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிப்பாளையம் அருகே உள்ள பொலவக்காளிபாளையம், பெரியார்நகர், இந்திராநகர் பகுதியில் அதிமுக வேட்பாளர் ஆனந்தனுக்கு ஆதரவாக அமைச்சர் செங்கோட்டையன் நேற்று வாக்கு சேகரித்தார். அவர் சென்ற இடங்களில் தொழிலாளர்கள் திரண்டு முற்றுகையிட்டனர். வீடு கட்டி தர வலியுறுத்தினர். 100 நாள் வேலை உறுதி திட்ட தொழிலாளர்களுக்கு கடந்த ஒன்றரை மாதமாக சம்பளம் வரவில்லை என குற்றம் சாட்டினர்.
இதற்கு செங்கோட்டையன், `ஒரு வார காலத்தில் உங்களுக்கு பணம் வரும். நிலுவையில் உள்ள பணத்தை கொடுப்பதுடன், ஆண்டு முழுவதும் வேலை வழங்கினால் மட்டுமே வெற்றிபெற முடியும் என மத்திய அரசிடம் பேசி ஒப்புதல் வாங்கி உள்ளோம்’ என அவர்களிடம் தெரிவித்தார்.
இதைத்தொடர்ந்து, பெரியார் நகருக்கு சென்றபோது, செல்வராஜ்-பிரியா தம்பதியினர் தங்களது 10 மாத ஆண் குழந்தைக்கு பெயர் வைக்குமாறு கூறி குழந்தையை அமைச்சர் செங்கோட்டையனிடம் கொடுத்தனர்.
குழந்தையை வாங்கிய அமைச்சர், உடனே குழந்தைக்கு ‘ஜெயலலிதா’ என பெயர் வைத்தார். அப்போது அங்கிருந்தவர்கள், ஐயோ இது ஆண் குழந்தை’’ என கூறியதும், உடல் நெளிந்தபடி, `ராமச்சந்திரன்’ என்று பெயர் வைத்தார். குழந்தை ஆணா-பெண்ணா என அறியாமலேயே ஆண் குழந்தைக்கு பெண் பெயர் சூட்டுகிறாரே என்று தம்பதியினர் அதிர்ச்சியுடனும், தமிழகத்துக்கு அமைச்சராக இருக்கக்கூடியவர் இப்படி தவறாக பெயர் வைக்கிறாரே என்று பொதுமக்களும் வேதனையுடன் அங்கிருந்து சென்றனர்.
பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி