பாஜ.வில் இத்தேர்தலில் 70 வயதை கடந்த மூத்த தலைவர்களுக்கு போட்டியிட வாய்ப்பு வழங்கப்படவில்லை. இந்த கொள்கை முடிவில், 91 வயதான அத்வானி, 85 வயதான முரளி மனோகர் ஜோஷி போன்ற மூத்த தலைவர்கள் இரையாகி விட்டனர். மக்களவை சபாநாயகர் சுமித்ரா மகாஜனுக்கும் வரும் 12ம் தேதியுடன் 76 வயது ஆகிறது. இதனால், இவரும் இதுவரை வேட்பாளராக அறிவிக்கப்படாமல் சஸ்பென்ஸ் நீடிக்கிறது. மத்திய பிரதேச மாநிலத்தில் உள்ள இந்தூர் தான் இவருடைய தொகுதி. எத்தனையோ ஆட்சி மாற்றங்களை நாடு சந்தித்துள்ள போதிலும், இங்கிருந்து 8 முறை தேர்வு செய்யப்பட்டுள்ளார் சுமித்ரா. மக்களவையின் 2வது பெண் சபாநாயகர் இவர், இத்தொகுதியில் தொடர்ந்து வெற்றிக்கனியை பறித்தவர் என்பதால், இந்த முறையும் இவர்தான் வேட்பாளராக அறிவிக்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், வேட்டாளர் அறிவிப்பு தாமதம் ஆகிக்கொண்டே செல்கிறது.
இது பற்றி சுமித்ரா மகாஜனிடம் கேட்டபோது, ‘‘கடந்த 1989ம் ஆண்டு தொடங்கி கடந்த 30 ஆண்டுகளில் ஒருமுறை கூட சீட் வேண்டும் என்று பாஜ.வில் கேட்டது கிடையாது. அவர்களாகத்தான் கொடுத்து வருகின்றனர். இப்போது, யார் இந்த தொகுதியில் போட்டியிடுவார்கள் என கூற முடியாது. கட்சி என்ன நினைக்கிறது என எனக்கு தெரியாது. கட்சியாக பெயரை முடிவு செய்து வெளியிடும் வரை நான் எதுவும் கூற முடியாது’’ என்றார்.
பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி