×

பாஜவால் தஞ்சை விரைவில் எத்தியோப்பியாவாக மாறும்: வைகோ பரபரப்பு பேச்சு

சென்னை: தமிழ்நாட்டின் தஞ்சை தரணி விரைவில் எத்தியோப்பியாவாக மாறும் என மதிமுக பொது செயலாளர் வைகோ பேசினார்.காஞ்சிபுரம் மக்களவை தொகுதி திமுக வேட்பாளர் ஜி.செல்வம், திருப்போரூர் சட்டமன்ற தொகுதி திமுக வேட்பாளர் எஸ்.ஆர்.எல்.இதயவர்மன் ஆகியோரை ஆதரித்து  மதிமுக பொதுச்செயலாளர் வைகோ திருப்போரூர் ரவுண்டானா அருகே நடந்த பொதுக்கூட்டத்தில் பேசியதாவது:தமிழகத்துக்கு மோடி அரசு செய்த வஞ்சகம் கொஞ்ச நஞ்சமல்ல. தமிழ்நாட்டின் தஞ்சை தரணி விரைவில் எத்தியோப்பியாவாக மாறும். 50 ஆயிரம் சிறு, குறு, நடுத்தர  தொழிற் கூடங்கள் மூடப்பட்டுவிட்டன. 5 லட்சம் பேர் வேலை இழந்து விட்டனர். 2 கோடி பேருக்கு வேலை தருவதாக சொன்னார்கள். 2 பேருக்கு கூட வேலை தரவில்லை.

தமிழ்நாட்டில் ஒரு ஊழல் கறை படிந்த அரசு, ஊழல் புதை மணலில் சிக்கியுள்ள அரசு, துணைவேந்தர் நியமனத்தில் ஊழல், நெடுஞ்சாலைத் துறையில் ஊழல், குட்கா ஊழல்  என பல செய்த எடப்பாடி அரசு மோடிக்கு வெண் சாமரம் வீசுகிறது. இந்த அரசு தூக்கி எறியப்பட வேண்டும். மத்தியிலும், மாநிலத்திலும் ஆட்சி மாற்றம் ஏற்பட வேண்டும்.இந்த ஆட்சிகள் ஒழிய தமிழ்நாட்டின், தமிழர்களின் வாழ்வாதார உரிமைகள் பாதுகாக்க காஞ்சிபுரம் மக்களவை வேட்பாளராக போட்டியிடும் செல்வம், திருப்போரூர்  சட்டமன்ற வேட்பாளராக போட்டியிடும் இதயவர்மன் ஆகியோருக்கு உதயசூரியன் சின்னத்தில் வாக்களிக்க வேண்டும்.இவ்வாறு அவர் பேசினார்.

கூட்டத்தில் மதிமுக மாநில துணை பொது செயலாளர் மல்லை சத்யா, காஞ்சி வடக்கு மாவட்ட திமுக செயலாளர் தா.மோ. அன்பரசன், முன்னாள் எம்எல்ஏ தமிழ்மணி,  மாவட்ட துணை செயலாளர்கள் விஸ்வநாதன், அன்புச்செழியன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாவட்ட செயலாளர் சங்கர், திருப்போரூர் தெற்கு ஒன்றிய திமுக செயலாளர்  பையனூர் சேகர், மாவட்ட இளைஞர் அணி துணை அமைப்பாளர் விஜயகுமார், மதிமுக ஒன்றிய செயலாளர்கள் லோகு, சுரேஷ், திருப்போரூர் நகர காங்கிரஸ் தலைவர்  தியாகு மற்றும் கூட்டணிக் கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.



பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Tanjore ,Ethiopia ,Bhajan , Tanjor,soon ,Ethiopia ,Bhajan
× RELATED தஞ்சை நாடாளுமன்ற தொகுதியில் 2வது நாளாக வேட்பு மனு தாக்கல் செய்யவில்லை