டெல்லி; காங்கிரஸ் கட்சி வெளியிட்டுள்ள மக்களவை தேர்தலுக்கான தேர்தல் அறிக்கை ராணுவத்திற்கு எதிராக உள்ளதாக, மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் குற்றம்சாட்டியுள்ளார். டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ராணுவம் மற்றும் காஷ்மீர் மாவட்ட நிர்வாகத்தை பலவீனப்படுத்தும் வகையில் காங்கிரசின் தேர்தல் அறிக்கை அமைந்துள்ளதாக குறிப்பிட்டார். ஆயுதப்படை சிறப்பு சட்டத்தை அகற்றுவதற்கென்று ஒரு முறை உள்ளது. இதற்கு மத்திய மாநில அரசுகள் இணைந்து செயல்பட வேண்டும். ஆனால் காங்கிரஸின் தேர்தல் அறிக்கை ராணுவத்திற்கு எதிரானது. பயங்கரவாதிகள், பிரிவினைவாதிகளை ஊக்குவிக்கும் வகையில் அமைந்துள்ளது என்றார்.
தீவிரவாதிகளுக்கு சாதகமாக உள்ள காங்கிரஸின் தேர்தல் அறிக்கை தீவிரவாதிகளுக்கு மட்டுமே உதவும் மக்களுக்கு அல்ல. காஷ்மீரில் ராணுவத்தை தண்டிக்க காங்கிரஸ் விரும்புகிறது. ஆயுதப்படை சிறப்பு சட்டத்தை தீவிரவாதிகளுக்கு ஆதரவு அளிக்கும் நபர்கள் தவறாக பயன்படுத்துவார்கள். நாட்டிற்காகவே முப்படையினர் போராடி வருகின்றனர். ஆனால் அவர்களின் நம்பிக்கையை பலவீனப்படுத்தும் வகையில் காங்கிரஸின் தேர்தல் அறிக்கை உள்ளதாக கூறினார். காஷ்மீரில் ராணுவத்திற்கு உதவ போகிறீர்களா அல்லது பிரிவினைவாதிகளுக்கு உதவ போகிறீர்களா என்பதை காங்கிரஸ் தெளிவுபடுத்த வேண்டும் என்று அமைச்சர் நிர்மலா வலியுறுத்தினார்.
பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி