தாராபுரம்: தாராபுரம் அருகே கடந்த இரண்டு மாதமாக குடிநீர் விநியோகிக்கப்படாததை கண்டித்து ஆறு கிராம மக்கள் மக்களவை தேர்தலை புறக்கணிப்பதாக கூறி, வீடு மற்றும் கடைகளில் கருப்புக்கொடி ஏற்றி போராட்டம் நடத்தி வருகின்றனர். திருப்பூர் மாவட்டம் தாராபுரம், ஈரோடு மக்களவை தொகுதிக்கு உட்பட்டது. தாராபுரம் பகுதியில் உப்பாறு அணை அருகே தொப்பம்பட்டி ஊராட்சியில் சின்னிய கவுண்டம்பாளையம், மடத்துபாளையம், வெங்கிட்டிபாளையம், சகுனிபாளையம், தொப்பம்பட்டி உள்ளிட்ட 16 கிராமங்கள் உள்ளன. இப்பகுதிக்கு அமராவதி மற்றும் காவிரி கூட்டு குடிநீர் திட்டம் மூலம் குடிநீர் விநியோகிக்கப்பட்டு வருகிறது. இதுதவிர உப்பாறு அணை பகுதியில் உள்ள போர்வெல் மூலம் தண்ணீர் விநியோகிக்கப்படுகிறது.
இந்நிலையில் அமராவதி மற்றும் காவிரி கூட்டுக் குடிநீரை கடந்த 2 மாதமாக இப்பகுதிகளுக்கு விநியோகிக்கவில்லை. இதேபோல் போர்வெல் தண்ணீரும் 3 மாதமாக விநியோகிக்கவில்லை. இதுகுறித்து இப்பகுதி மக்கள் கலெக்டர் மற்றும் தாராபுரம் வட்டார வளர்ச்சி அலுவலரிடம் புகார் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால் தற்போது ஒரு குடம் தண்ணீர் ₹10க்கு விற்கப்படுகிறது.இதையடுத்து உடனடியாக தண்ணீர் விநியோகிக்க வலியுறுத்தி, சின்னியகவுண்டம்பாளையம், மடத்துபாளையம் உள்ளிட்ட 6 கிராம மக்கள் வரும் மக்களவை தேர்தலை புறக்கணிப்பதாக கூறி வீடு மற்றும் கடைகளில் நேற்று காலை முதல் கருப்பு கொடி ஏற்றி போராட்டம் நடத்தி வருகின்றனர்.
பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி