சென்னை: அதிமுகவுடன் இணைக்க எந்தப் பேச்சும் நடக்கவில்லை. தொடர்ந்து ெபாய் தகவலை பரப்பினால் மதுரை ஆதீனம் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமமுக துணை பொதுச்செயலாளர் டிடிவி. தினகரன் எச்சரிக்கை விடுத்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: அதிமுகவும், அமமுகவும் இணைய வாய்ப்பிருப்பதாகவும், அதற்கான பேச்சுவார்த்தை நடந்து வருவதாகவும் சில வாரங்களுக்கு முன்பு மதுரை ஆதீனம் ஒரு கருத்தை வெளியிட்டிருந்தார். அப்படி எந்தப் பேச்சுவார்த்தையும் நடக்கவில்லை. அதற்கு அவசியமும் இல்லை என்று மிக நாகரிகமாக நான் மறுப்பு தெரிவித்திருந்தேன். ஆனால், மீண்டும் அதே கருத்துக்களை சொல்லியிருப்பதைப் பார்த்தால், யாருக்கோ ஏஜென்டாக இருக்கிறார் போல.
அது யாருக்கு, எங்கள் துரோகிகளுக்கா, இல்லை எதிரிகளுக்கா, அவர் சொல்வது போல இணைப்புப் பேச்சு நடப்பது உண்மையானால், அதைச் செய்வது யார் என்று வெளிப்படையாக அறிவிக்க வேண்டியதுதானே? ஜெயலலிதாவை பழித்துப் பேசிய கட்சிகளுடன் தங்கள் சுயலாபத்துக்காக கூட்டணி வைத்திருக்கும் எடப்பாடி மற்றும் பன்னீர்செல்வத்தை கண்டிக்க முடியாமல், யாருக்கோ உதவுவதற்காக இப்படி பொய் செய்திகளை தொடர்ந்து பரப்பினால், மதுரை ஆதீன மடத்தின் பெயரைக் காக்கவாவது, அருணகிரி ஆதீனம் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்க விரும்புகிறேன். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி