ஜம்மு: காஷ்மீரின் புல்வாமா பகுதியில் கடந்த பிப்ரவரி 14ம் தேதி, சிஆர்பிஎப் வீரர்கள் சென்ற வாகனத்தின் மீது பேருந்தை மோதச் செய்து, ஜெய்ஷ் இ முகமது தீவிரவாத அமைப்பு நடத்திய தற்கொலைப் படை தாக்குதலில், 40 வீரர்கள் பலியாகினர். இந்தியாவில் நடந்த மிகப்பெரிய தீவிரவாத சம்பவங்களில் ஒன்றாக இது கருதப்படுகிறது.இந்நிலையில், காஷ்மீர் பள்ளத்தாக்கின் பனிஹாலில் இருந்து 7 கிமீ தொலைவில் உள்ள திதார் கிராமத்தில், ஜவஹர் சுரங்கப்பாதையை கடந்து சிபிஆர்எப் வீரர்களின் வாகனங்கள் கடந்த சனிக்கிழமை அணிவகுத்து சென்று கொண்டிருந்தன. அப்போது, வாகனங்களின் அருகே வந்த கார் ஒன்று திடீரென வெடித்து தீப்பிடித்து எரிந்தது.
காரை ஓட்டி வந்த டிரைவர் தப்பி ஓடினான். காரில் பெட்ரோல் கேன்கள், ஜெலட்டின் குச்சிகள், எல்பிஜி சிலிண்டர்கள் உள்ளிட்ட ஐஇடி வகை குண்டுகளை தயாரிக்க பயன்படும் பொருட்கள் இருந்தன.அந்த பகுதியில் நடத்தப்பட்ட சோதனையில் கிடைத்த ஒரு கடிதத்தில், காரை ஓட்டி வந்தவன் ஹிஸ்புல் தீவிரவாதி எனவும், புல்வாமா போன்ற சம்பவத்தை அரங்கேற்ற திட்டமிட்டு அவன் அனுப்பப்பட்டதும் தெரியவந்தது. தீவிர தேடுதல் வேட்டைக்குப்பின், அந்த தீவிரவாதி நேற்று கைது செய்யப்பட்டதாக தேசிய புலனாய்வு அமைப்பு தெரிவித்துள்ளது.
பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி