சென்னை : திமுக பொருளாளர் துறைமுருகன் மகனும் வேலூர் தொகுதி திமுக வேட்பாளருமான கதிர் ஆனந்துக்கு சொந்தமான கல்லூரியில் வருமான வரிசோதனை நடைபெற்று வருகிறது. மேலும் 10 இடங்களில் இந்த சோதனை நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் வருமான வரிசோதனைக்கு தடை விதிக்க வேண்டும் என கதிர் ஆனந்த் நீதிமன்றத்தில் முறையீடு செய்துள்ளார். நாடாளுமன்ற தேர்தலையொட்டி வேலூர் தொகுதியில் திமுக சார்பில் முன்னாள் அமைச்சர் துறைமுருகனின் மகன் கதிர் ஆனந்த் போட்டியிடுகிறார். இந்த நிலையில் கடந்த 30ம் தேதி அதிகாலையில் இருந்து அவரது வீடு, அலுவலகங்கள் மற்றும் கல்லூரி உள்ளிட்ட 10 இடங்களில் வருமான வரித்துறையினர் திடீர் சோதனையில் ஈடுபட்டனர். தற்போது, இந்த சோதனையை எதிர்த்து, சென்னை உயர்நீதிமன்றத்தில் முறையீடு செய்துள்ளார். கதிர் ஆனந்த் தரப்பு வழக்கறிஞர் இன்று ஐகோர்ட் நீதிபதி முன்பு ஆஜராகி முறையீடு செய்துள்ளார்.
அதில், ஏற்கனவே வருமான வரிக்கணக்கை முழுமையாகவும், முறையாகவும் செலுத்தி வருவதாகவும், ஆனால் வருமானவரித்துறை வேண்டுமென்றே அரசியல் உள்நோக்கத்தோடும், பழிவாங்கும் எண்ணத்தோடும் இந்த சோதனையை மேற்கொண்டு வருவதாக தெரிவித்துள்ளார். மேலும் தேர்தல் நேரத்தில் தனது வாக்கு சேகரிக்கும் பணிக்கு இடையூறாக இந்த சோதனை நடைபெற்று வருவதாகவும், இதனால் தன்னை முடக்கி வைத்திருப்பதாகவும் அவர் தரப்பில் முறையீடு செய்யப்பட்டது. தேர்தல் பணிகளை முடக்கும் நோக்கத்தில் வருமான வரிசோதனை நடத்தப்படுவதாக நீதிபதியிடம் புகார் தெரிவிக்கப்பட்டது. எனவே இந்த மனுவை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என்றும், குறிப்பாக வருமான வரிசோதனைக்கு தடை விதிக்க வேண்டும் என்றும் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி அனிதா சுமந்த் முன்பு முறையீடு செய்யப்பட்டுள்ளது. இதனை ஏற்றுக்கொண்ட நீதிபதி, இது தெடர்பாக மனுதாக்கல் செய்ய கதிர் ஆனந்த் தரப்பு வழக்கறிஞரிடம் கூறியுள்ளார். மேலும் அநத மனுவை நாளை விசாரிப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.
பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி