×

அவங்கள நம்பி ஓட்டு போடாதீங்க ப்ளீஸ் திரிணாமுல் காங்கிரஸ் பாஜவின் மாயக்குதிரை: மார்க்சிஸ்ட் எச்சரிக்கை

‘‘பாஜ.வின் மாயக்குதிரைதான் திரிணாமுல் காங்கிரஸ். எனவே, அதை நம்பி ஓட்டு போடாதீர்கள்’’ என மேற்கு வங்க மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் செயலாளர் சூர்ய காந்த மிஸ்ரா தெரிவித்துள்ளார்.  மேற்கு வங்கத்தில் கொடிக்கட்டி பறந்த சிபிஎம் கட்சிக்கு தற்போது அங்கு 2 மக்களவை உறுப்பினர்களே உள்ளனர். காங்கிரசுக்கு 4 எம்பி.க்கள் உள்ளனர். இந்த நிலையில் காங்கிரசும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் அங்கு கூட்டணி அமைத்து போட்டியிட முடிவு செய்தன. ஆனால், அது தோல்வியில் முடிந்தது. இதையடுத்து, இந்த மாநிலத்தில் உள்ள 42 தொகுதிகளில் இரு கட்சிகளும் தலா 40 தொகுதிகளில் தனித்தே போட்டியிடுகின்றன. இம்மாநிலத்தில் 7 கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது.

 இந்நிலையில், மேற்கு வங்க சிபிஎம் செயலாளர் சூர்ய காந்த மிஸ்ரா நேற்று அளித்த பேட்டியில், ‘‘பாஜ.வின் மாயக்குதிரை தான் திரிணாமுல் காங்கிரஸ். எதிரிகளை வீழ்த்துவதில் இரண்டும் மறைமுகமாக கூட்டணி அமைத்து செயல்படுகின்றன. எனவே, மேற்கு வங்கத்தில் திரிணாமுல், பாஜவை  தோற்கடிக்க, மக்கள் அனைவரும் காங்கிரஸ் அல்லது இடதுசாரி கட்சிகளுக்கு வாக்களிக்க வேண்டும். கடந்த 5 ஆண்டு கால பாஜ ஆட்சி நாட்டின் பேரிடராகவே அமைந்துள்ளது. பாஜ, திரிணாமுலுக்கு எதிரான வாக்குகளை ஒன்றிணைக்க விரும்பியே காங்கிரசுடன் கூட்டணி முயற்சி மேற்கொண்டோம். அதேபோல், எங்கள் இரு கட்சிகள் பிடியில் உள்ள 6 தொகுதிகளில் பரஸ்பரம் போட்டியிடுவதில்லை எனவும் முடிவு செய்தோம். தொகுதிப்பங்கீடு முடிவுக்கு வராதது ஏன் என்பதை பொதுமக்கள் முடிவுக்கே விட்டு விடுகிறோம். எனவே, திரிணாமுல், பாஜ வேட்பாளர்களை  தோற்கடிக்க காங்கிரசால் மட்டுமே முடியும் என நம்பினால் அவர்களுக்கு வாக்களியுங்கள் அல்லது எங்களால் முடியும் என்றால் எங்களுக்கு வாக்களியுங்கள்’’ என்றார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : TMC , Trinamool Congress, BJP, Marxist
× RELATED மேட்டூர் அணையின் நீர்மட்டம் 55.62 அடியாக குறைவு..!!