மக்களவை தேர்தலுக்காக அதிமுக கூட்டணியில் பா.ஜ.க., பா.ம.க., தேமுதிக உள்ளிட்ட கட்சிகள் இடம் பெற்றுள்ளது. கூட்டணி கட்சி வேட்பாளர்களை தேமுதிக பொருளாளர் பிரேமலதா ஆதரித்து பிரசாரம் செய்து வருகிறார். நேற்று முன்தினம் கோவை கணபதி பகுதியில் பா.ஜ.க.வின் கோவை மக்களவை தொகுதி வேட்பாளர் சி.பி.ராதாகிருஷ்ணனை ஆதரித்து பிரேமலதா விஜயகாந்த் பிரச்சாரம் செய்தார். அவரின் வருகைக்காக பா.ஜ.க., அ.தி.மு.க.வினர் வந்திருந்தனர். இதையடுத்து, வேட்பாளர் ராதாகிருஷ்ணனை தனது வாகனத்தில் ஏற்றாமல் அவரை வேறு வாகனத்தில் நிறுத்தி வைத்து மக்களிடையே பேசினார். பிரசாரத்தில் பேசிய பிரேமலதா, ``சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு முரசு சின்னத்தில் ஓட்டு போடுங்க...’’ எனக்கூறி அதிர்ச்சியை ஏற்படுத்தினார். உடனடியாக சமாளித்த அவர் ‘சாரி’ தாமரைக்கு ஓட்டு போடுங்க... என கூறினார். இதைகேட்டு மக்களும், கூட்டணி கட்சியினரும் அதிர்ந்தனர்.
எனினும் பிரச்சாரத்தை தொடர்ந்த அவர், ‘‘புல்வாமா தாக்குதலை நடத்தியவர் பிரதமர் நரேந்திர மோடி’’ எனக்கூறியதால் கூட்டத்தில் சலசலப்பு ஏற்பட்டது. கேரளாவில் காங்கிரஸ் கட்சியும், கம்யூனிஸ்ட் கட்சியும் எலியும், புலியுமாக சண்டை போடுவதாக கூறிய அவர் சிறிது நேரத்தில் எலியும் பூனையும் என மாற்றி பேசி கூட்டத்தில் இருந்த மக்களை குழப்பினார். கூட்டணி கட்சியினர் யார் என்பதை மறந்து தனது கட்சி சின்னத்தை மட்டும் பிரேமலதா அடிக்கடி கூறியதாலும், புல்வாமா பகுதியில் தீவிரவாதிகள் நமது எல்லை படை வீரர்களை கொன்றது குறித்து எதுவும் தெரியாமல் மோடிதான் என பேசியதும் பொதுமக்களை மட்டுமல்ல; வேட்பாளர், கூட்டணி கட்சியினரையும் அதிர்ச்சியடைய செய்தது.
பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி