×

சேலத்திலும் பொள்ளாச்சி போல் சம்பவம்? காதலர்களுடன் வரும் பெண்களை ஆபாச படம் எடுத்து மிரட்டல்: நகை பறித்த 2 பேர் கைது

சேலம்: சேலத்தில் பட்டர்பிளை பாலத்திற்கு காதலர்களுடன் வரும் பெண்களை மிரட்டி நகை பறித்ததாக 2 பேர் கைது செய்யப்பட்டனர்.. சேலம் கொண்டலாம்பட்டி பட்டர்பிளை பாலம் அருகே, சர்வீஸ் ரோடு பகுதியில் வரும் காதலர்களையும், கள்ளக்காதலர்களையும் மடக்கி ஒரு கும்பல் நகை, பணத்தை பறிப்பதுடன் அவர்களை புகைப்படம் எடுத்துக் கொண்டு, உல்லாசம் அனுபவித்து வருவதாக தொடர்ந்து புகார்கள் எழுந்தது. இந்நிலையில் கடந்த 22ம் தேதி, சேலம் அஸ்தம்பட்டியை சேர்ந்த வாலிபர் ஒருவர் பவானியை சேர்ந்த காதலியை அழைத்துக் கொண்டு, இரவு 8 மணியளவில் டூவீலரில் புறப்பட்டார். பட்டர்பிளை பாலம் சர்வீஸ் ரோட்டில் சென்ற போது, வழிப்பறி கும்பல் ஒன்று அவர்களை சுற்றி வளைத்தது. பின்னர், கும்மிருட்டான பகுதிக்கு அழைத்து சென்று, சரமாரியாக தாக்கியதுடன், அந்த பெண் அணிந்திருந்த 4 பவுன் நகையை பறித்துக் கொண்டது. அப்போது, அந்த வாலிபரும், இளம்பெண்ணும் கட்டிப்பிடித்து முத்தம் கொடுப்பது போன்ற புகைப்படத்தையும் எடுத்துக் கொண்டனர்.

 இதுகுறித்து அந்த வாலிபர் கொடுத்த புகாரின் பேரில், கொண்டலாம்பட்டி போலீசார் விசாரணை நடத்தி, அதே பகுதியை சேர்ந்த மணிகண்டன்(32), சுபாஷ்(25) ஆகியோரை கைது செய்தனர். விசாரணையில், மணிகண்டனின் கூட்டாளி வெங்கடேசன் என்பவருடன் இணைந்து, 2 வருடங்களுக்கு மேலாக அவ்வழியாக வரும் காதலர்கள், கள்ளக்காதலர்களை மிரட்டி நகை, பணம் பறித்தது தெரியவந்தது. இவர்கள் 50க்கும் மேற்பட்ட பெண்களை இவ்வாறு மிரட்டி புகைப்படம் எடுத்து, அதை காட்டியே உல்லாசம் அனுபவித்ததும் தெரியவந்தது. ஆனால் யாரும் புகார் கொடுக்கவில்லை. மேலும், விபசார அழகிகளை அழைத்து வரும் தொழிலதிபர்களை மிரட்டியும், அவ்வப்போது பணம் பறித்து வந்துள்ளனர். பொள்ளாச்சி சம்பவத்தை போன்று பெண்களை வீடியோ படமெடுத்து, இவ்வாறு மிரட்டி இருக்கலாம் என்ற புகாரும் எழுந்துள்ளது. இதில் முக்கிய குற்றவாளியாக கருதப்படும் வெங்கடேஷ் தலைமறைவாகி விட்டார். அவரை தேடும் பணியில் போலீசார் ஈடுபட்டு உள்ளனர். இந்த சம்பவத்தை போலீசார் மூடி மறைப்பதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

 இதுகுறித்து உயர் அதிகாரி ஒருவர் கூறுகையில், ‘பட்டர்பிளை பாலம் அருகே ரோந்து போலீசார் அவ்வப்போது சென்று வருகிறார்கள். அங்குள்ள காட்டு பகுதிக்குள் விபசாரத்திற்காக பெண்களை அழைத்து சென்றவர்களை மிரட்டி, இந்த கும்பல் பணம் பறித்துள்ளனர். இவர்களிடம் தீவிர விசாரணை நடத்தியதில், ஆபாசமாக யாரையும் படம் எடுக்கவில்லை என கூறியுள்ளனர். பாதிக்கப்பட்ட யாராவது புகார் கொடுக்கும் பட்சத்தில், அவர்கள் பெயரை வெளியிடாமல் ரகசியமாக விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும். தலைமறைவாக உள்ள வெங்கடேசனை தேடி வருகிறோம்,’ என்றார். இந்நிலையில், சிறையில் அடைக்கப்பட்ட மணிகண்டன், சுபாஷ் ஆகியோரை காவலில் எடுத்து விசாரிக்க, போலீசார் சேலம் 5வது நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனர்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : incident ,Pollachi ,Salem ,girls , Pollachi, lovers, women, pornography, blackmail, 2 arrested
× RELATED பொள்ளாச்சி மார்க்கெட்டுக்கு தக்காளி வரத்து அதிகரிப்பு