சென்னை: தென்சென்னை தொகுதி வேட்பாளர் ரங்கராஜனை ஆதரித்து செம்மஞ்சேரி, குடிசை மாற்று வாரிய குடியிருப்பு பகுதியில் கமல்ஹாசன் தனது பிரசாரத்தைத் தொடங்கினார். அப்போது கமல்ஹாசன் பேசியதாவது: எனது கட்சியின் வேட்பாளர் அசாம் மாநில கலெக்டராக இருந்து அந்த பணியை துறந்து மக்கள் பணி செய்ய வந்துள்ளார். இத்தொகுதியில் 2,500 டன் குப்பை தினமும் எரிக்கப்படுகிறது. ஆனால், எங்களிடம் அறிவார்ந்த நபர்கள் மூலம் அந்த குப்பை, மக்களின் உபயோகப் பொருளாக மாற்ற முடியும். அதற்கான திட்டங்கள் எங்களிடம் உள்ளது. அதை செயல்படுத்துவது மக்கள் கையில் உள்ளது. ஒவ்வொரு வீட்டிற்கும் குடிநீர் வழங்குவது கடமை. அதை நாங்கள் செய்து காட்டுவோம். நீர்நிலைகளை பராமரிப்போம், குளங்களை வெட்டுவோம். இதன் மூலம் பலருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும். எங்களின் ஒவ்வொரு திட்டத்திலும் ஏராளமான வேலை வாய்ப்புகள் உள்ளன.
தற்போது, திருடிக் கொண்டிருப்பவர்கள் திருட்டை நிறுத்தினாலே இரண்டு தமிழகத்தை நடத்தலாம். மக்களுக்கு தேவையான திட்டங்களை கொண்டுவர பல நல்ல அறிஞர்கள் உள்ளனர். அவர்களை தவிர்த்து, கமிஷன் கொடுப்பவர்களையே நாடுகின்றனர். நாங்கள் செயல்படுத்தும் திட்டங்கள் மூலம், ஐ.டி.,காரிடாரில் இரண்டு லட்சம் வேலை வாய்ப்புகள் உருவாகும். உங்களுக்கான திட்டங்களை செய்வோம் என ஓட்டு வேட்டையாடியவர்கள் ஏமாற்றி உள்ளனர். எனவே, எங்களுக்கு ஒரு வாய்ப்பு கொடுங்கள். நாங்கள் செய்து காட்டுகிறோம். இவ்வாறு அவர் பேசினார்.இதையடுத்து, சோழிங்கநல்லூர், கண்ணகிநகர், கந்தன்சாவடி, விஜயநகர், சைதாப்பேட்டை, தி.நகர், பட்டினப்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் கமல்ஹாசன் பிரசாரம் மேற்கெண்டார்.
பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி