கருங்கல்: தமிழக காவல்துறை கணினிமயமாக்கப்பட்டு இணையதளம் மூலம் இணைக்கப்பட்டுள்ளது. தற்போது ஒவ்வொரு வழக்கு சம்பந்தப்பட்ட ஆவணங்களையும் சம்பந்தப்பட்டவர்கள் இணையதளம் மூலம் பதிவிறக்கம் செய்யும் வசதி செய்யப்பட்டுள்ளது. சாலை விபத்து அல்லது குற்ற சம்பவங்கள் தொடர்பான வழக்கு பதிவு விவரம், சமர்ப்பிக்கப்பட்ட ஆவணங்கள் அனைத்தும் காவல்துறை இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்படும். அதை சம்பந்தப்பட்ட வழக்கின் புகார்தாரர் அளிக்கும் செல்போன் எண்ணில் அனுப்பப்படும் ஓடிபி எண் மூலம் பதிவிறக்கும் செய்யும் வசதி தொடங்கப்பட்டுள்ளது. இந்த வசதியை பொதுமக்கள் மத்தியில் பிரபலப்படுத்தும் வகையில் காவல் நிலையங்கள், ரயில் மற்றும் பஸ் நிலையங்கள், மக்கள் அதிகம் கூடும் சந்திப்புகளில் பிளக்ஸ் போர்டாக வைக்கப்பட்டுள்ளது.
இதன் தொடக்க நிகழ்ச்சி மார்த்தாண்டம் காவல் நிலையத்தில் நடந்தது. காவல் நிலையம் முன் வைக்கப்பட்டுள்ள பிளக்ஸ் ேபார்டில், வாகன ஓட்டுநர் உரிமம் காப்பீடு சான்று, மாதிரி வரைபடம், பார்வை மகஜர், வாகன பதிவு சான்று மோட்டார் ஆய்வாளர் சான்று, பிரேத பரிசோதனை சான்று, காயசான்று, இறுதி அறிக்கை உள்ளிட்டவற்றை பாதிக்கப்பட்டவர் www.tnpolice.gov.in என்ற இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இதற்கான ஏற்பாடுகளை மார்த்தாண்டம் போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார், குற்றம் மற்றும் குற்றவாளிகளை கண்காணிக்கும் வலைபின்னல் தளம் (சிசிடிஎன்எஸ்) உதவி ஆய்வாளர்கள் வேணுகுமார், துரைராஜ் மற்றும் போலீசார் செய்துள்ளனர்.
பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி